ஆதரவு கிடைக்காததால் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட அப்துல்கலாம் தயக்கம்
குடியரசுத் தலைவராக தாம் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று பலரும் விரும்புவதாக கலாம் கூறியிருந்தார். கலாமை முன்னிறுத்தப் போவதாக திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜியும் அறிவித்திருந்தார். நேற்றுவரை கலாம்தான் நிச்சயம் பிரணாப்புக்கு போட்டியாக இருப்பார் என்ற சூழல் இருந்தது. ஆனால் டெல்லி காட்சிகள் முற்றாக மாறிப்போய்விட்டன.
குறிப்பாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வேட்பாளராக பிரணாப் முகர்ஜி அறிவிக்கபப்ட்டுவிட்ட நிலையில் அனேகமாக மமதா பானர்ஜி மட்டும்தான் கலாமுக்கான ஆதரவாளராக இருக்கக் கூடும் என்ற நிலை உருவாகிவிட்டது. மமதாவுடன் கை கோர்த்து கடந்த 2002-ம் ஆண்டு கூட கலாமுக்கு ஆதரவு தெரிவித்த சமாஜ்வாதி கட்சியும் பிரணாப்பை ஆதரிக்கப் போவதாக அறிவித்துவிட்டது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியும் கூட பிரணாப்பை ஆதரிக்கும் என்ற சூழ்நிலை இருப்பதால் கலாமுக்கு ஆதரவு கிடைக்காது என்ற நிலை உறுதியாகிவிட்டது. இந்த சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு கலாம் தேர்தலில் போட்டியிட தயக்கம் காட்டுவதாகக் கூறப்படுகிறது.
தமக்கு 60 விழுக்காட்டினர் ஆதரித்தால்தான் தேர்தலில் போட்டியிடுவேன் என்றும் கலாம் கூறியிருந்தார். இதனால் தற்போது கலாம் போட்டியிடமாட்டார் என்றே தெரிகிறது