
கடையநல்லூர்: ரூ.50,000 லஞ்சம் வாங்கிய கடையநல்லூர் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
கடையநல்லூர் காவல் நிலைய ஆய்வாளராக இருப்பவர் ஜெயராமன். அவரிடம் அதே ஊரைச் சேர்ந்த மாரியப்பன் என்பவர் நிலத் தகராறு குறித்து புகார் அளித்துள்ளார். இது குறித்து ஆய்வாளர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். மேலும் மாரியப்பனிடம் ஜெயராமன் தனக்கு ரூ.50,000 லஞ்சமாக கொடுத்தால் எதிரி மீது வழக்கு பதிவு செய்வதா தெரிவித்துள்ளார். இதையடுத்து மாரியப்பன் ஜெயராமனுக்கு ரூ.50,000 லஞ்சம் கொடுத்துள்ளார்.
பணம் பெற்ற பின்பும் ஜெயராமன் வழக்குப் பதிவு செய்யாமல் காலம் தாழ்த்தவே மாரியப்பன் இது குறித்து நெல்லை எஸ்பி விஜயேந்திர பிதாரியிடம் புகார் அளித்தார். அப்புகாரில் தனது நிலத்தை ஒருவர் மோசடி செய்து விட்டதாகவும் அப்பிரச்சனையை தீர்க்க ஆய்வாளர் ஜெயராமன் ரூ.50,000 லஞ்சம் பெற்ற பின்னரும் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யாமல் காலம் தாழ்த்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து எஸ்.பி. விஜயேந்திர பிதாரி தனிப்படை மூலம் விசாரணை நடத்த உத்தரவிட்டார்.
விசாரணையில் அப்புகார் உண்மை என்பது தெரிய வந்ததை தொடர்ந்து நெல்லை டி.ஐ.ஜி.யிடம் அறிக்கை தாக்கல் செய்தார். இதையடுத்து டிஐஜி வரதராஜு கடையநல்லூர் இன்ஸ்பெக்டர் ஜெயராமனை தாற்காலிக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இச்சம்பவம் நெல்லை மாவட்ட காவல் துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.










