
பெய்ஜிங்: சீனாவில் இருந்து ஷென்ஷோ-9 என்னும் மனிதர்களை கொண்டு செல்லும் விண்கலம் சனிக்கிழமை விண்ணில் ஏவப்படுகிறது. இந்த விண்கலத்தில் முதன் முதலாக பெண் ஒருவரை, விண்வெளிக்கு அனுப்புகிறது சீனா.
விண்வெளியில் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையம் ஒன்றை அமைக்க, சீனா திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான பணிகளை மேற்கொள்வதற்காக, "ஷென்ஷோ-9' என்ற விண்கலத்தை சனிக்கிழமை விண்ணில் ஏவுகிறது. முதன் முதலாக ஒரு பெண் உட்பட மூன்று பேர், இந்த விண்கலத்தில் செல்கின்றனர்.
33 வயதான லியூ யாங் என்கிற அந்த பெண் சீன விமானப் படையின் விமானியாக இருந்துள்ளார். அவரால் இயக்கப்பட்ட விமானத்தில் 18 புறாக்கள் மோதிய போது சாமர்த்தியமாக அதனை தரையிறக்கினார்.
இந்த சாமர்த்தியம்தான் அவருக்கு இந்த விண்வெளி வாய்ப்பை அளித்துள்ளது. லியுவுக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது
ரஷ்யா, அமெரிக்காவை தொடர்ந்து சீனாவும் பெண் ஒருவரை விண்ணில் செலுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அவரோடு ஜிங் ஹாய்பெங் மற்றும் லியூ வாங் ஆகியோரும் செல்கின்றனர்.
இவர்கள் மூவரும் பீப்பில் லிபரேசன் ஆர்மி விமானதளத்தில் இருந்து விண்வெளிக்கு பயணமாக உள்ளனர்.
இந்த பயணம் குறித்து கருத்து கூறியுள்ள லியூ. இது எனது கனவு பயணம். அந்த சுற்றுச்சூழலில் பயணிப்பதற்காகவும், வசிப்பதற்காகவும் என்னை தயார் படுத்திக்கொண்டேன். விண்வெளியில் இருந்து அழகான பூமியையும், அழகான எனது வீட்டினையும் கண்டு ரசிப்பேன் என்று கூறினார் விண்வெளி மங்கை.










