
மதுரை: பாலியல் குற்றச்சாட்டு, அடிதடி, பொது அமைதிக்குப் பங்கம் ஆகிய வழக்குகளில் சிக்கி சிறை சென்று, ஜாமீனில் விடுதலையாகியுள்ள நித்தியானந்தா மதுரைக்கு வந்து விட்டார். மதுரை ஆதீன மடத்திற்குள் அவர் தற்போது ரெஸ்ட் எடுத்து வருகிறார்.
சனிக்கிழமை அதிகாலையில், மடத்திற்கு நித்தியானந்தா வந்து சேர்ந்தாராம். அவருக்கு அங்கு மதுரை ஆதீனம் சார்பில் வரவேற்பு அளித்து, ஆரத்தி எடுத்து உள்ளே கூட்டிச் சென்றனராம்.
கர்நாடக போலீஸாரால் கைது செய்யப்பட்ட நித்தியானந்தாவுக்கு ஏகப்பட்ட நிபந்தனைகளை விதித்து ராமநகர மாவட்ட ஆட்சித் தலைவர் ஸ்ரீராம ரெட்டி ஜாமீன் கொடுத்து வெளியே விட்டுள்ளார். இதையடுத்து கர்நாடகத்தை விட்டு கிளம்பினார் நித்தியானந்தா. சனிக்கிழமை அதிகாலையில் தனது சீடர்கள் பரிவாரத்தோடு மதுரை ஆதீன மடத்தின் வாசலுக்கு வந்தார்.
அவருக்கு அரசியல் கட்சிகள் பாணியில் பட்டாசு வெடித்து தடபுடலாக வரவேற்பு அளித்தனர். ரோட்டுக்கே வந்து மதுரை ஆதீனம் நித்தியானந்தாவை ஆரத்தி எடுத்து வரவேற்று உள்ளே கூட்டிச் சென்றார்.
இனிமேல் மதுரை ஆதீன மடத்திலேயேதான் நித்தியானந்தா இருப்பார் என்று தெரிகிறது.










