
டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு இதுவரை 23 கட்சிகள் ஆதரவைத் தெரிவித்துள்ளன. லேட்டஸ்டாக தெலுங்கு தேசமும் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 19ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுத் தாக்கல் ஏற்கனவே தொடங்கி விட்டது. இதில் ஐக்கிய முற்போக்குக்கூட்டணி சார்பில் பிரணாப் முகர்ஜி நிறுத்தப்பட்டுள்ளார். எதிர்க்கட்சிகள் சார்பில் இதுவரை யாரும் அறிவிக்கப்படவில்லை. பி.ஏ.சங்மா போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.
அப்துல் கலாம் போட்டியிடுவார் என்ற பலத்த எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அவர் போட்டியிட மாட்டேன் என்று கூறி விட்டதால் பிரணாப் முகர்ஜியின் கை வேகமாக ஓங்கி விட்டது. அப்துல் கலாம் போட்டிக் களத்தில் இல்லாததால் தேர்தலே சப்பென்று போய் விட்டது.
இப்போதைக்கு பிரணாப் முகர்ஜியை ஆதரிக்க வேண்டும், இல்லாவிட்டால் சங்மாவை ஆதரிக்க வேண்டும் என்ற இரட்டை நிலை மட்டுமே அனைத்துக் கட்சிகள் முன்பும் உள்ளது.
எதிர்க்கட்சிகள் மத்தியில் ஒற்றுமை இல்லாமல் போய் விட்டதால் பிரணாப் முகர்ஜிக்கு வெற்றி வாய்ப்பு நிச்சயம் என்று ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி உற்சாகமாக உள்ளது. பிரணாப் முகர்ஜிக்கு கூடி வரும் ஆதரவை அவர்கள் கணக்குப் போட்டுப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
இதுவரை அவருக்கு 23 கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளனவாம். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அத்தனை பேருமே மாறுபட்ட கருத்துடன் உள்ள நிலையில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில், திரினமூல் காங்கிரஸ் தவிர மற்ற கட்சிகள் அனைத்தும் ஒருமனதாக பிரணாப் முகர்ஜியை ஆதரிக்கின்றன
சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சி, சிவசேனா என பெரிய பெரிய கட்சிகள் எல்லாம் பிரணாப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. தற்போது தெலுங்கு தேசமும் ஆதரவு தெரிவித்துள்ளது. அதேபோல இடதுசாரிகள் நாளை கூடி தங்களது ஆதரவை தெரிவிக்கவுள்ளனர். கட்டக் கடைசியாக பாஜக கூட்டணி தனது நிலைப்பாட்டை அறிவிக்கும் என்று தெரிகிறது.
தற்போதைய நிலவரப்படி பிரணாப் முகர்ஜி பெரிய அளவிலான வெற்றியைப் பெறுவார் என்ற நிலையே காணப்படுகிறது.










