மதுரை: நித்தியானந்தாவை கைது செய்த கர்நாடக அரசை கண்டித்து அவரது ஆதரவாளர்கள் மதுரையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது கர்நாடக அரசு கவிழ வேண்டும் என்று அவர்கள் சாபம் விட்டனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூர் பிடதி ஆசிரமத்தில் செய்தியாளர்களை தாக்கிய வழக்கில் அம்மாநில போலீசார் நித்தியானந்தாவை கைது செய்தனர். பின்பு அவர் ஜாமீனில் விடுதலை ஆனார். இந்த நிலையில் மதுரை ஜான்சிராணி பூங்கா அருகே நித்தியானந்தாவை கைது செய்த கர்நாடக அரசை கண்டித்து அகில பாரத இந்து மகாசபா, இந்து எழுச்சி இயக்கம்,இந்து மக்கள் கட்சி ஆகிய இயக்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்து மாகசபா மாவட்ட பொதுச் செயலாளர் அண்ணாத்துரை தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் செல்லத்துறை, இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் இந்து மாகசபா மாநிலத் தலைவர் பாலசுப்பிரமணியன் மற்றும் பலர் கர்நாடக அரசை கண்டித்து பேசினர்.
நித்தியானந்தாவை கைது செய்த கர்நாடக அரசு விரைவில் கவிழும் என சாபமிட்டனர். மேலும் கர்நாடக அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். ஆர்பாட்டகாரர்களுக்கு போலீசார் பாதுகாப்பு வழங்கினர்.










