
மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டதால் கடல் நீர் கடற்கரை கோவிலுக்குள் புகுந்தது.
தமிழகத்தில் பிரபல சுற்றுலாத்தலமாகத் திகழும் மாமல்லபுரத்தில் நேற்று மாலை 5 மணிக்கு கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது. இதையடுத்து கடல் அலைகள் சுமார் 10 அடி உயரத்திற்கு எழுந்தன. மேலும் அலைகள் 80 மீட்டர் தூரம் வரை சீறி வந்தன. இதனால் கடற்கரையில் அமைந்துள்ள கோவிலுக்குள் கடல் நீர் புகுந்தது. மேலும் கோவிலைச் சுற்றி கடல் நீர் தேங்கியதால் அது குளம் போல் காட்சி அளித்தது.
கரை நோக்கி சீறிப் பாய்ந்த அலைகள் மீனவர் குடியிருப்பு மற்றும் உணவு விடுதிகளுக்குள்ளும் புகுந்தது. இதனால் அப்பகுதியில் கடல் அரிப்பு ஏற்பட்டு மீனவர்கள் படகுகள் நிறுத்த இடமில்லாமல் திணறி வருகின்றனர். இது தவிர கொக்கிலமேடு, தேவனேரி, வெண்புருஷம் ஆகிய மீனவர்கள் குடியிருப்பு பகுதிகளிலும் கடல் நீர் புகுந்தது.
இது குறித்து கொக்கிலமேடு மீனவர் பி. குணசேகரன் கூறுகையில்,
முன்பெல்லாம் அமாவாசை, பவுர்ணமி அன்று தான் கடல் சீற்றம் இருக்கும். ஆனால் தற்போது சுனாமி ஏற்பட்ட பிறகு எப்பொழுது கடல் சீற்றம் ஏற்படும் என்பதை கணிக்கவே முடியவில்லை.
45 நாள் மீன்பிடி தடைகாலம் முடிந்து அண்மையில் தான் நாங்கள் கடலுக்குச் செல்ல ஆரம்பித்தோம். ஆனால் நீரின் சுழற்சி, ராட்சத அலையின் சீற்றத்தால் எங்களால் கடலின் தன்மையை கணிக்க முடியவில்லை. மீன்களும் அப்படி ஒன்றும் அதிகமாக கிடைப்பதில்லை என்றார்.





















