கெய்ரோ: கைது செய்யப்பட்டுள்ள எகிப்து முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக் கோமா நிலைக்குச் சென்றுள்ளார்.
உடல் நல குறைப்பாடு காரணமாக சிறையில் இருந்து மாற்றப்பட்டு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள முபாரக்குக்கு பக்கவாதம் தாக்கியது. இதையடுத்து அவர் கோமா நிலைக்குச் சென்றுவிட்டதாக அந் நாட்டு அரசு செய்தி நிறுவனமான மெனா தெரித்துள்ளது.
இப்போது செயற்கை சுவாசத்தில் இருந்து வரும் முபாரக், மருத்துவரீதியில் இறந்துவிட்டதாகவே கருதப்பட வேண்டும் என்றும் அந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கோமா நிலையில் இருந்து அவரை மீட்க தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
எகிப்தை நீண்டகாலமாக அடக்கி ஆண்டு வந்த முபாரக் (வயது 84), தனக்கு எதிராக புரட்சி நடத்திய பொது மக்களை ராணுவம் மூலம் கொன்று குவித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
ஜனநாயகக் கோரி நடந்த மக்கள் புரட்சி மூலம் முபாரக் அகற்றப்பட்டாலும், அங்கு ஆட்சி இப்போது ராணுவத்தின் கட்டுப்பாட்டில் போய்விட்டது. அங்கு நடந்தி தேர்தலின் முடிவுகளை ராணுவம் இன்னும் முறைப்படி அறிவிக்காமல் இழுத்தடித்து வருகிறது. ராணுவமே ஆட்சியை நடத்தி வருகிறது.
இதையடுத்து ராணுவத்துக்கு எதிராக தினந்தோறும் தஹ்ரீர் ஸ்கொயர் பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்,





















