
சென்னை: குடியரசுத் தலைவர் தேர்தலை புறக்கணிப்பது என்ற முடிவை தேமுதிக தலைவர் விஜயகாந்த் கைவிட வேண்டும். பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவு தெரிவிக்க முன்வர வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
குடியரசுத் தலைவர் தேர்தலைப் புறக்கணிக்க தேமுதிக முடிவு செய்திருப்பதாக அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்திருப்பது வருத்தத்தை அளிக்கிறது. தமிழக நலனுக்காக காங்கிரஸ் கட்சி குரல் எழுப்பி வரும் பல பிரச்னைகளையே தேர்தல் புறக்கணிப்புக்கான காரணங்களாக அவர் கூறியுள்ளார்.
முல்லைப் பெரியாறு பிரச்னையில் காங்கிரஸ் கடுமையான நிலையை எடுத்தது. நீதிபதி ஆனந்த் கமிட்டியின் அறிக்கை தமிழகத்துக்கு சாதகமாக வந்துள்ளது. இடைக்கால தீர்ப்பின்படி, அணையின் நீர்மட்டத்தை குறைக்கவோ, அதிகரிக்கவோ முடியாது. உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகே மத்திய அரசு நடவடிக்கை எடுக்க முடியும்.
காவிரி பிரச்னை இன்று நேற்று ஏற்பட்டதல்ல. கர்நாடகத்தில் ஆட்சிகள் மாறினாலும், காட்சிகள் மாறுவதில்லை. வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு காவிரி கரை புரண்டு வரும் நேரத்தில் அந்த நீரை தேக்கி வைக்க டெல்டா பகுதிகளில் மிகப்பெரிய ஏரிகளோ, நீர்த்தேக்கங்களோ அமைக்கப்படாததற்கு மத்திய அரசோ, காங்கிரஸ் கட்சியோ காரணம் அல்ல.
இலங்கைப் பிரச்னையில் அந்நாட்டு அரசுக்கு இந்திய அரசு உடந்தையாக இருந்தது என்பது தவறான குற்றச்சாட்டு. இந்தியா மட்டுமல்ல, பல உலக நாடுகள் போரை நிறுத்தச் சொல்லியும், தீவிரவாதத்துக்கு எதிரான போரை இலங்கை நிறுத்தவில்லை.
தமிழக காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகளின் கோரிக்கையை ஏற்று ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமை மாநாட்டில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரித்தது.
ராமேசுவரம் மீனவர் பிரச்னையில் பல கட்டங்களில் இலங்கையோடு மத்திய அரசு பேசியது. மீனவ அமைப்புகளும் என்னோடு பேசின. சில குறிப்பிட்ட நபர்கள் சட்டத்துக்குப் புறம்பாக இரட்டை மடி வலையைப் பயன்படுத்தி மீன்பிடிப்பதை மீனவர் சங்கங்கள் சுட்டிக்காட்டின.
எனவே, யார் குடியரசுத் தலைவராக வந்தால் என்ன என்கிற சித்தாந்தம் சரியல்ல. தேசியத்தை தன் கட்சி பெயரில் இணைத்திருக்கும் விஜயகாந்த், தேசிய இயக்கத்தின் சார்பில் போட்டியிடும் மிகச் சிறந்த நிர்வாகியான பிரணாப் முகர்ஜியை ஆதரிக்க வேண்டும்.
தேர்தல் புறக்கணிப்பு என்ற முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.










