அறந்தாங்கி: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 46 வயது ஆசிரியை வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். அவரது வீட்டில் மது பாட்டில்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கொலையாளி யார் என்பது குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
அறந்தாங்கியில் உள்ள காரைக்குடி சாலையில், ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்தவர் வானதி. 46 வயதான இவர் அரிமளம் அருகே ஒரு ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவரது கணவர் பெயர் முத்துக்காமாட்சி. இவர் ஏற்கனவே இறந்து விட்டார்.
இந்தத் தம்பதிக்கு சுபலட்சுமி என்ற மகளும், அய்யப்பராஜ் என்ற மகனும் உள்ளனர். சுபலட்சுமி டாக்டராக இருக்கிறார். திருமணமாகி தனது கணவருடன் சிங்கப்பூரில் வசித்து வருகிறார். அய்யப்பராஜ் எம்.பி.ஏ படித்துள்ளார். தனது சகோதரியைக் காண சிங்கப்பூர் போயுள்ளார்.
தனது பிள்ளைகள் போக 13 வயதான நித்யஸ்ரீ என்ற பெண் குழந்தையை வானதி தத்தெடுத்து வளர்த்து வந்ததாக தெரிகிறது. 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் வானதியும், நித்யஸ்ரீயும் தூங்கிக் கொண்டிருந்தனர்.
அப்போது இரவில் மின்வெட்டு ஏற்பட்டது. இதனால் தூக்கமம் கெட்ட நித்யஸ்ரீ, வானதியைத் தேடி வந்தார். அப்போது வானதி தனது அறையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதைப் பார்த்து அவர் அலறினார். இதையடுத்து அக்கம் பக்கத்தில் வசிப்போர் ஓடி வந்தனர்.
அவரை அரிவாள் மற்றும் கத்தியால் சரமாரியாக வெட்டி, குத்திக் கொலை செய்துள்ளனர். தகவல் அறிந்து போலீஸார் விரைந்து வந்தனர்.
சத்தமே கேட்காமல் கொலை நடந்தது எப்படி...
ஆசிரியை வானதியின் வீட்டில் ஒரு மது பாட்டில் காணப்பட்டது. அதில் பாதி அளவுக்கு ரம் இருந்தது. இன்னொரு ரம் பாட்டில் காலியாக கிடந்தது. வீட்டில் வேறு எதுவும் கொள்ளை போகவில்லை. அவரது செல்போன்கள், ஏடிஎம் கார்டுகள் மட்டும் காணவில்ல.
எனவே இதுநிச்சயம் ஆதாயத்திற்காக நடந்த கொலையாக இருக்க வாய்ப்பில்லை என்று போலீஸார் கருதுகிறார்கள். நிச்சயம் வானதிக்குத் தெரிந்தவர்கள்தான் இரவில் வந்துள்ளனர். அவர்கள்தான் கொலையைச் செய்திருக்க முடியும் என்று போலீஸார் கருதுகின்றனர். மேலும் ஒன்றுக்கு மேற்பட்டோர் வந்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
ஆசிரியை வீட்டில் சிறுமி தூங்கிக் கொண்டிருந்தாள், அக்கம் பக்கத்தில் பலர் குடியிருக்கின்றனர். ஆனால் வானதி இவ்வளவு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் ஒரு சத்தமும் கேட்காதது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
ஆசிரியை வானதி சுமார் 10-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடியிருக்கும் அப்பார்ட்மெண்டில் குடி யிருந்தார். அருகருகே வீடுகள் இருந்தும் அவரை கொலையாளி வெட்டிய போது யாருக்கும் சப்தம் கேட்காதது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.





















