
கொழும்பு: இலங்கை சென்றுள்ள இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் இன்று அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்சவை சந்தித்துப் பேசினார்.
இலங்கைக்கு சிவசங்கர் மேனன் நேற்று இரவு சென்றடைந்தார். இன்று காலை அவர் மகிந்த ராஜபக்சவை அவரது அலரி மாளிகையில் சந்தித்துப் பேசினார். சிவசங்கர் மேனனுடன் இந்திய இணை செயலாளர் ஹர்ஷ்வர்தனும் சென்றிருந்தார்.
இலங்கையின் வடக்குப் பகுதியில் முகாம்களில் உள்ள தமிழர்களின் நிலைமை, மறுசீரமைப்பு பணிகள், வடகிழக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்கள் ஆகியவை குறித்து இருவரும் விவாதித்ததாக இலங்கை அரசின் அதிகாரப்பூர்வ இணைய தளம் தெரிவிக்கிறது.
மேலும் இலங்கையின் கிழக்கில் சம்பூரில் இந்தியா உதவியுடன் அமைக்க திட்டமிட்டுள்ள அனல் மின் நிலையம் பற்றியும் இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டுள்ளது.


















