சரமாரியாக கள்ளக்காதல்... தட்டிக் கேட்ட அண்ணனைக் கொன்ற தங்கைக்கு ஆயுள்!
அரியலூர்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சரமாரியாக பலருடன் கள்ளக்காதல் கொண்டு திரிந்து வந்த தங்கையைத் தட்டிக் கேட்ட அண்ணன், தனது சொந்தத் தங்கையாலேயே சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்டார். அந்தப் பெண்ணுக்கு தற்போது கோர்ட் ஆயுள் தண்டனை கொடுத்துள்ளது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே, சூரியமணல் கிராமத்தைச் சேர்ந்தவர் ராசாத்தி. இவருக்கு வயது 38 ஆகிறது. இவருக்கும் ஆசைத்தம்பி என்பவருக்கும் 20 வருடங்களுக்கு முன்பு கல்யாணம் செய்து வைத்தனர். ராஜா என்ற மகனும் உள்ளான்.
கல்யாணமாகி இத்தனை ஆண்டுகள் ஆன பின்னரும் ராசாத்தி பலருடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்தாராம். இவர் கள்ளத் தொடர்பு வைத்திருந்த நபர்கள் அனைவருமே சூரியமணல் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள். இந்த நிலையில் தனது தங்கை தறி கெட்டுப் போவதை அறிந்த அண்ணன் ராஜேந்திரன், தங்கையைத் தட்டிக் கேட்டுள்ளார், கண்டித்துள்ளார். மேலும் காங்கேயன்குறிச்சிக்கு அனுப்பிவைத்து விட்டார்.
இந்தப் பின்னணியில் ராசாத்தியின் கணவர் ஆசைத்தம்பி வெளிநாட்டுக்கு வேலைக்குப் போய் விட்டார். அங்கிருந்து மனைவிக்கு பணத்தை அனுப்பி வைத்து வந்தார். இதைப் பயன்படுத்திய ராசாத்திக்கு வசதியாகிப் போய் விட்டது. பணத்தோடு, கள்ளத் தொடர்பு உறவுகளையும் சுதந்திரமாக அனுபவிக்க ஆரம்பித்தார். மேலும் சூரியமணல் கிராமத்தில் பெரிய வீடு கட்டி தனது கள்ளக் காதலர்களுடன் எந்த நேரமும் உல்லாசமாக இருக்க அவர் முடிவு செய்தார்.
இதை அறிந்த ராஜேந்திரன் கடும் கோபமடைந்தார். தங்கையைக் கண்டித்தார். தொடர்ந்து தனது அண்ணன் இடையூறாக இருந்து வந்ததால் கோபமடைந்தார் ராசாத்தி. அண்ணனை போட்டுத் தள்ள முடிவு செய்தார்.
2010ம் ஆண்டு ஜனவரி 22ம் தேதி ஜெயங்கொண்டத்துக்கு வந்த ராசாத்தி, அங்குள்ள சந்தையில் அரிவாள் வாங்கி கொண்டு, மாலை தனது அண்ணன் வீட்டுக்கு சென்று தங்கினார். நள்ளிரவில் அனைவரும் தூங்கி கொண்டிருந்தபோது, ராசாத்தி, தன்னிடமிருந்த அரிவாளால் ராஜேந்திரனை சரமாரியாக வெட்டினார்.
சத்தம் கேட்டு தடுக்க வந்த அவர்களது தாய் கமலத்துக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. தலை, மார்பு என உடலின் பல்வேறு இடங்களிலும் அரிவாளால் வெட்டப்பட்ட ராஜேந்திரன், சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயமடைந்த அவரது அம்மா கமலம், ஆபத்தான நிலையில் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
இந்தக் கொலை வழக்கில் ராசாத்தி கைது செய்யப்பட்டார். அவர் மீதான விசாரணை அரியலூர் மாவட்ட கோர்ட்டில் நடந்தது. விசாரணையின் முடிவில் ராசாத்திக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.