+2வில் வாங்கிய மார்க் 1100... 50 பெண்களுக்கு ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பி சிக்கிய மாணவன்!
மதுரை: பிளஸ்டூவில் 1100 மார்க் வாங்கி, பொறியியல் படிப்பில் சேர காத்திருக்கும் ஒரு மாணவன், தனது ஆசிரியைகள் உள்பட ஏராளமான பெண்களுக்கு ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பியும், செல்போனில் ஆபாசமாகப் பேசியும் போலீஸில் சிக்கி சிறுவர் சிறைக்குப் போயுள்ள பரிதாபம் நடந்துள்ளது மதுரையில்.
மதுரை தெற்குவாசல் பகுதியைச் சேர்ந்தவன் மணிகண்டன். பிளஸ்டூ முடித்துள்ளான். பிளஸ்டூ தேர்வில் 1100 மதிப்பெண் வாங்கியுள்ளான். நன்கு படிக்கக் கூடிய மாணவன். யாருடனும் அதிகம் பேச மாட்டானாம், வீட்டில் கூட எப்போதும் தனது அறைக்குள்ளேயே முடங்கியிருப்பானாம். இதனால் ஏதோ படிக்கிறான் போல என்று நினைத்து வீட்டில் கண்டுகொள்ளாமல் விட்டுள்ளனர். ஆனால் அந்த மாணவின் செயல் இன்று அவனது குடும்பத்தை மட்டுமல்லாமல், அந்த மாணவனின் பெருமையையும் தலைகுப்புற கவிழ்த்துப் போட்டு விட்டது.
50க்கும் மேற்பட்ட பெண்களுக்கு ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பியதாகவும், செல்போனில் தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசியதாகவும் கூறி கைது செய்யப்பட்டுள்ளான் மணிகண்டன்.
அவன் ஆபாசமாக பேசியது, எஸ்.எம்.எஸ் அனுப்பியவர்கள் பட்டியலில் அவனது பள்ளி ஆசிரியைகள் சிலரும் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இவனது பள்ளியில் எட்டாம் வகுப்பு ஆங்கில ஆசிரியை ஒருவருக்கு தொடர்ந்து எஸ்.எம்.எஸ். அனுப்பி வந்துள்ளான் மணிகண்டன்.மேலும் செல்போனில் தொடர்பு கொண்டு ஆபாசமாகவும் பேசியுள்ளான். இவனது தொல்லை தாங்க முடியாமல்ஆசிரியை போலீஸில் புகார் கொடுத்தார். இதையடுத்து சைபர் கிரைம் போலீஸார் விசாரணையில் இறங்கினர்.
இந்த விசாரணையில் மாணவன் மணிகண்டன் வசம் செல்போன் இருப்பதும், அவன்தான் இப்படிச் செய்கிறான் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து அவனைக் கையும் களவுமாக பிடிக்க திட்டமிட்டனர் போலீஸார். அவன் பயன்படுத்தி வந்த போனிலிருந்து யார் யாருக்கெல்லாம் அழைப்பு போயிருக்கிறது என்பதை ஆராய்ந்தனர். அதில் பெரும்பாலான எண்கள் பெண்கள் வைத்திருந்ததாகும். அவர்களிடம் விசாரித்தபோது தங்களுக்கு தொடர்ந்து ஆபாச எஸ்எம்எஸ் வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து மாணவன் மணிகண்டனின் முகவரியைக் கண்டுபிடித்த போலீஸார், முதலில் மணிகண்டனின் செல்போனுக்கு ஒரு ஆண் கான்ஸ்டபிள் மூலம் மிஸ்ட் கால் கொடுத்தனர். இதையடுத்து அந்த எண்ணை அழைத்த மணிகண்டன், எதிர்முனையில் யார் பேசுகிறார்கள் என்பதைக் கூட உணராமல், எடுத்த எடுப்பிலேயே ஆபாசமாக பேச ஆரம்பித்தான். தான் போலீஸ்காரருடன் பேசுகிறோம் என்று தெரியாமல் அவன் பேசினார். இந்த ஆதாரத்தை வைத்துக் கொண்டு மணிகண்டன் வீடு புகுந்தனர் போலீஸார்.
அவனைக் கைது செய்த போலீஸார், அவனது அறையை சோதனை போட்டனர். அப்போது அங்கிருந்து ஒன்பது சிம் கார்டுகள், 2 மொபைல் போன்கள், 2 மெமரி கார்டுகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.
இந்த நடவடிக்கை குறித்து சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி கூறுகையில், முதலில் நாங்கள் அவனது அறைக்குள் போக முயன்றபோது எங்களைத் தடுத்து நிறுத்தி கத்தினான் மணிகண்டன். அறைக்குள் வந்து சோதனை போட்டால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறி அழுதான். இருப்பினும் அவனை சமாதானப்படுத்தி விட்டு சோதனை போட்டோம்.
நன்கு படிக்கக்கூடிய இந்த மாணவன், மிகப் பெரிய கிரிமனல் ஒருவன் செயல்படுவது போல பல்வேறு சிம் கார்டுகள், செல்போன்கள், மெமரி கார்டுகளை வைத்துக் கொண்டு இப்படி நடந்து கொண்டிருப்பது அதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் உள்ளது என்றார்.
மணிகண்டனின் பெற்றோர் பெரும் அதிர்ச்சியுடன் உள்ளனர். மிகவும் அமைதியான பையன், யாருடனும் அதிகம் பேச மாட்டான், பழக மாட்டான். அவன் இப்படிச் செய்திருப்பான் என்பதை நம்பவே முடியவில்லை என்று கூறி அவர்கள் அழுதனர்.
மணிகண்டன் போலீஸாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில், இது எனக்குப் பொழுதுபோக்கு. நான் பாட்டுக்கு ஏதாவது எண்ணைப் போடுவேன். பெண்கள் வந்தால் ஆபாசமாக பேசுவேன், எஸ்எம்எஸ் அனுப்புவேன்.
எனது பள்ளியிலிருந்து ஆசிரியைகளின் செல்போன் எண்கள் கிடைத்தன. அதை கொண்டு அவர்களுக்கும் அனுப்பினேன் என்று கூறியுள்ளான்.
கைது செய்யப்பட்ட மணிகண்டன், சிறார் பாதுகாப்பு முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளான்.