செங்கோட்டை: செங்கோட்டையிலிருந்து நெல்லைக்கு நாள் ஒன்றுக்கு நான்கு முறை பயணிகள் ரயில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே கால அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி- செங்கோட்டை இடையிலான அகல ரயில்பாதை பணிகள் முடிவடைந்து விரைவில் ரயில் இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து தற்போது தென்னக ரயில்வேயின் கால அட்டவணையில் 63வது எண் கொண்ட டேபிளில் நெல்லைக்கும், செங்கோட்டைக்கும் இடையே தினசரி இரு இடங்களில் இருந்தும் நான்குமுறை புதிய அகல ரயில்பாதையில் பயணிகள் ரயில் இயக்கப்படும் என்ற தகவல் வந்துள்ளது.
இதன்படி செங்கோட்டையிலிருந்து நெல்லைக்கு காலை 6.30, 11, மாலை 3.15, 6 மணிக்கும், நெல்லையிலிருந்து செங்கோட்டைக்கு காலை 6.45, 9.30, பிற்பகல் 2, மாலை 6.20 மணிக்கும் ரயில்கள் இயக்கப்படும். ரயில்கள் இயக்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.










