முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டத் தேவையில்லை: கேரள எம்.எல்.ஏ. பல்ராம்
திருவனந்தபுரம்: முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதாகக் கூறுவது இடுக்கி மக்களை ஏமாற்றுவதற்காக சிலரால் கூறப்படும் மோசடித் திட்டம் என்றும், அங்கு புதிய அணை கட்டத் தேவையில்லை என்றும் கேரள காங்கிரஸ் எம்.எல்.ஏ. பல்ராம் அறிக்கை வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட வேண்டும் என்று கூறி கேரளாவில் வண்டிப் பெரியாறு மற்றும் சப்பாத்து பகுதிகளில் போராட்டம் நடந்து வருகிறது. இந்த போராட்டத்திற்கு பி.சி. ராய் தலைமை வகித்தார். இந்நிலையில் முல்லைப் பெரியாறில் புதிய அணை தேவையில்லை என சில மாதங்களுக்கு முன் ராய் திடீரென பேசினார். இதனால் போராட்டக் குழு தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
இந்நிலையில் ராய் தலைமையில் கோட்டயத்தில் உயிர் என்ற தமிழ், மலையாள கலாச்சார அமைப்பின் கூட்டம் நடந்தது. அப்போது பேசிய ராய், முல்லைப் பெரியாறில் புதிய அணை தேவையில்லை. அதற்கு பதிலாக சுரங்கம் அமைத்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் கொண்டு செல்லலாம் என்றார். தொடர்ந்து காங்கிரஸ் எம்.எல்.ஏ. பல்ராமின் அறிக்கை கூட்டத்தில் வாசிக்கப்பட்டது. அதில், முல்லை பெரியாறில் புதிய அணை கட்டத் தேவையில்லை. புதிய அணை என்ற கோரிக்கையை விட்டு விட்டு வேறு திட்டத்தை ஆலோசிக்கலாம். புதிய அணை என்பது இடுக்கி பகுதி மக்களை ஏமாற்றுவற்காக சிலரால் கூறப்பட்டு வரும் ஒரு மோசடித் திட்டம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.