
டெல்லி: கட்சியை வழிநடத்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி மறுக்கிறார் என்று கூறி மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் புதிய புயலைக் கிளப்பியுள்ளார்.
ஒரு பத்திரிக்கைக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், காங்கிரஸை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்ல அடுத்த தலைமுறைத் தலைவரான ராகுல் காந்தியிடமிருந்து எங்களுக்கு வழிகாட்டுதல் வர வேண்டும். அவர் தான் கட்சியின் 2வது தலைவர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், இன்னும் அவர் கட்சியின் பொறுப்பை முழு அளவில் ஏற்கவில்லை. கட்சியின் 2வது தலைவர் என்ற பொறுப்பை அவர் ஏற்க மறுக்கிறார்.
ஐக்கிய ஜனநாயகக் கூட்டணியின் அரசின் அரசியலும் அரசு நிர்வாகமும் கூடிக் கலந்துவிட்டன. அரசையும் அரசியலையும் பிரித்துப் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதை சரி செய்யும் சக்தி காங்கிரஸ் தலைவரிடம் மட்டுமே உள்ளது. பிரதமரால் அரசை மட்டுமே நடத்த முடியும். காங்கிரசுக்கு அரசியல் வழிகாட்டும் சக்தி பிரதமரிடம் இல்லை.
இப்போதைய அரசில் பொருளாதார சீர்திருத்தங்கள் மட்டும் தேங்கவில்லை. அரசு நிர்வாகம், அரசியல் நிர்வாகம் சீர்திருத்தங்கள் கூட தேங்கிக் கிடக்கின்றன என்று கூறியுள்ளார் குர்ஷித்.
இந் நிலையில் தனது கருத்துக்கள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு பிரசுரமாகியுள்ளதாக குர்ஷித் விளக்கம் தந்துள்ளார்.










