Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

அரசு கல்லூரிகளில் 1,623 கவுரவ விரிவுரையாளர்களை நியமிக்க ஜெயலலிதா உத்தரவு

Posted by:
Updated: Tuesday, July 10, 2012, 10:50 [IST]

சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரிகளில் 1,623 கவுரவ விரிவுரையாளர்களை நியமனம் செய்ய முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

உயர்கல்வி, மனித வளர்ச்சிக்கு ஆதாரமான தூணாகவும், மரபுவழிக் கல்விமுறைக்குச் சிகரமாகவும் விளங்குகிறது. தொழிலாளர் சந்தைக்குத் தேவையான உயர்ந்த திறன்களை வழங்குவதோடு மட்டுமல்லாமல், ஆசிரியர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள், குடிமைப் பணியாளர்கள், விஞ்ஞானிகள், தொழில் முனைவோர்கள் மற்றும் பல தொழில் வல்லுநர்களுக்கு இன்றியமையாத மேம்பட்ட திறன்களையும் உயர்கல்வி வழங்குகிறது.

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த உயர்கல்வியை மாணவ, மாணவியர், குறிப்பாக கிராமப்புற மாணவ, மாணவியர் தொடர்ந்து பயிலும் வண்ணம் சென்ற ஆண்டு 11 பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளையும், நடப்பு ஆண்டில் 3 பொறியியல் கல்லூரிகள், 7 பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் 11 பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளையும் துவங்க நான் ஆணையிட்டேன்.

கல்லூரிகள் துவக்கினால் மட்டும் போதாது அங்கு மாணவ, மாணவியர்களின் பணித் தேவைக்கேற்ப புதிய பாடப் பிரிவுகள் துவக்கப்பட வேண்டியது அவசியம் என்பதைக் கருத்தில் கொண்டு 51 கல்லூரிகளில் 299 புதிய இளநிலை, முதுநிலை, ஆராய்ச்சி பாடப் பிரிவுகள் துவக்கிடவும் நான் ஆணையிட்டேன்.

மேலும் இதற்கென 2012-13ம் ஆண்டில் 369 உதவி பேராசிரியர் பணியிடங்கள், 2013-14ம் ஆண்டில் 365 உதவி பேராசிரியர் பணியிடங்கள், 2014-15ம் ஆண்டில் 107 உதவி பேராசிரியர் பணிடங்கள் என 841 உதவி பேராசிரியர் பணியிடங்களை புதியதாக தோற்றுவிக்கவும் நான் ஆணையிட்டுள்ளேன்.

தற்போது புதிதாக உருவாக்கப்பட்ட பாடப் பிரிவுகளுக்கான பணியிடங்கள் மற்றும் ஏற்கனவே உள்ள காலிப்பணியிடங்கள் என மொத்தம் 1,623 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும் என்பது எனது கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது.

இந்த உதவிப் பேராசிரியர் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நிரப்ப சிறிது காலம் ஆகும் என்பதையும், பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பது மாணாக்கர்களின் கல்வியைப் பாதிக்கும் என்பதையும் கருத்தில் கொண்டு இந்தப் பணியிடங்களைத் தற்காலிகமாக கவுரவ விரிவுரையாளர்களைக் கொண்டு நிரப்ப நான் உத்தரவிட்டுள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன்படி 1,623 கௌரவ விரிவுரையாளர்கள் உடனடியாகத் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். கௌரவ விரிவுரையாளர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.10,000 தொகுப்பூதியமாக வழங்கப்படும். இதன்மூலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர் சிறந்தக் கல்வியைப் பெற வழிவகை ஏற்படும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Story first published:  Tuesday, July 10, 2012, 10:22 [IST]
English summary
CM Jayalalithaa has ordered the officials to employ 1,623 guest lecturers in the government colleges in the state.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter