புதுச்சேரி: பிராந்திய இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று புதுவை ஆளுநர் இக்பால் சிங்கை சந்தித்து அம்மாநில அதிமுகவினர் மனு ஒன்றை அளித்தனர்.
புதுவை மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமையிலான அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஓம் சக்தி சேகர், புருசோத்தமன், பெரியசாமி, பாஸ்கர் மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் புதுவை ஆளுநர் இக்பால் சிங்கை நேற்று சந்தித்து பிராந்திய இட ஒதுக்கீட்டை ரத்து செய்யக் கோரி மனு அளித்தனர்.
அதன் பிறகு அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் எம்.எல்.ஏ. செய்தியாளர்களிடம் கூறுகையில்,
புதுவை முதல்வரும், என்.ஆர். காங்கிரஸ் தலைவருமான ரங்கசாமி காங்கிரஸ் முதல்வராக இருந்தபோது பிராந்திய இடஒதுக்கீட்டை அமல்படுத்தினார். அரசியல் லாபத்திற்காக கொண்டு வரப்பட்டதாலும், உயர்கல்வி பயிலும் புதுவை மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதாலும் இந்த இடஒதுக்கீட்டை சட்டசபைக்கு உள்ளேயும், வெளியேயும் எதிர்த்து குரல் கொடுத்தோம்.
தற்போது பல கட்சிகளும், அமைப்புகளும் ஒருங்கிணைந்து பிராந்திய இடஒதுக்கீட்டிற்கு எதிராகக் குரல் கொடுத்து வருகின்றன. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய முதல்வர் மவுனமாக உள்ளார். எனவே, பிராந்திய இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று ஆளுநரிடம் மனு கொடுத்துள்ளோம் என்றார்.










