3 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த 77 வயது தாத்தாவுக்கு 3 ஆயுள் தண்டனை!
சென்னை: ஆபாசப் படத்தை டிவியில் போட்டுக் காட்டி, அதன் பின்னர் 3 சிறுமிகளை கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்த 77 வயது முதியவருக்கு 3 ஆயுள் தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பளித்துள்ளது சென்னை மகளிர் நீதிமன்றம்.
சென்னை வண்ணாரப் பேட்டை பென்சில் பேக்டரி பகுதியை சேர்ந்தவர் ஆ.சோமசுந்தரம். இவருக்கு 77 வயதாகிறது. முன்பு டெய்லர் கடை வைத்திருந்தார். அப்போது அந்தப் பகுதியைச் சேர்ந்த 12, 10 மற்றும் 9 வயதுடைய மூன்று சிறுமிகளை ஒவ்வொரு நாளும் ஒரு சிறுமி என நாசப்படுத்தி வந்துள்ளார்.
அவர்களை டீ வாங்கி வரச் சொல்லி வீட்டுக்குள் கூட்டிச் செல்வார். பின்னர் அங்கு வீடியோவில் ஆபாசப் படத்தைப் போட்டுக் காட்டுவார். அதன் பின்னர் பாலியல் பலாத்காரம் செய்வார். சில சமயங்களில் சிறுமிகளை கை, கால்களைக் கட்டிப் போட்டும் கூட நாசப்படுத்தியுள்ளார் இந்த காமவெறி பிடித்த நபர்.
ஒரு சிறுமியிடம் இப்படி மூர்க்கத்தனமாக நடந்து கொண்ட பின்னர் அவளது கையில் 10 ரூபாய் பணத்தை, மிரட்டி அனுப்பியுள்ளார். அந்த சிறுமி தனது பெற்றோரிடம் அழுது கொண்டே நடந்ததைக் கூறியுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கடந்த 2010ம் ஆண்டு ஏப்ரல் 11ம் தேதி புகார் கொடுத்தனர். இதையடுத்து போலீஸார் சோமசுந்தரத்தைக் கைது செய்தனர். விசாரணையில்தான் மொத்தம் 3 சிறுமிகளை அந்த நபர் நாசம் செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து தனித் தனியாக 3 கற்பழிப்பு வழக்குகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகள் மகளிர் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்தது. நேற்று தீர்ப்பு வழங்கினார் நீதிபதி மீனா சதீஷ்.
அப்போது அவர் கூறுகையில், சோமசுந்தரம், தங்கள் கை, கால்களை கட்டிப்போட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக சிறுமிகள் தெளிவாக சாட்சியம் அளித்துள்ளனர். இந்த வழக்கில் அரசு சாட்சிகளின் சாட்சியம், மருத்துவ அறிக்கை உள்ளிட்ட ஆதாரங்கள் அனைத்தும் சோமசுந்தரம் குற்றவாளி என்பதை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபித்துள்ளன.
எனவே சோமசுந்தரம் குற்றவாளி என்று தீர்மானிக்கிறேன். இந்திய தண்டனை சட்டம் 366(ஏ) (தகாத உறவு கொள்ளும் நோக்கத்தில் சிறுமியை மற்றொரு இடத்துக்கு இழுத்துச் செல்லுதல்) குற்றத்துக்காக தலா 10 ஆண்டு வீதம் 30 ஆண்டு சிறைத்தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.30 ஆயிரம் அபராதமும் விதிக்கிறேன்.
இந்திய தண்டனை சட்டம் 342 (சட்டவிரோதமாக அடைத்துவைத்தல்) குற்றத்துக்காக தலா ஒரு ஆண்டு வீதம் 3 ஆண்டு சிறை தண்டனையும், 376 பிரிவின்படி(கற்பழிப்பு குற்றம்) தலா ஒரு ஆயுள் தண்டனை வீதம் 3 ஆயுள் தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.30 ஆயிரம் அபராதமும் விதிக்கிறேன்.
இந்திய தண்டனை சட்டம் 506(2) (கொலை மிரட்டல்) குற்றத்துக்காக 15 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதிக்கிறேன்.
அனைத்துத் தண்டனைகளையும் குற்றவாளி சோமசுந்தரம் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
ஏக காலம் என்று உத்தரவிடப்பட்டிருப்பதால் அவர் ஒரு ஆயுள் தண்டனை மட்டும் அனுபவித்தால் போதுமானது என்பது குறிப்பிடத்தக்கது.