லண்டன் ஒலிம்பிக் போட்டி வரும் 27ம் தேதி துவங்க உள்ளது. ஒலிம்பிக் போட்டிகளில் பதக்க பட்டியலில் முதல் 10 இடங்களில் வரும் முக்கிய நாடுகள் ஆஸ்திரேலியா, சீனா. இதற்காக அதிகளவிலான விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் களமிறக்கப்படுவது வழக்கம்.
ஆனால் லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இரு நாடுகளும், குறைந்த அளவிலான விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளை களமிறக்கி உள்ளன. இந்த வகையில் கடந்த 20 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலியா ஒலிம்பிக் போட்டியில் மிக குறைவான எண்ணிக்கையில் வீரர்களை களமிறக்குகிறது.
கடந்த 1992 பார்சிலோனா ஒலிம்பிக் பேட்டியில் ஆஸ்திரேலியா அணியில் மொத்தம் 290 பேர் பங்கேற்றனர். அதன்பிறகு இந்த மாதம் நடைபெற உள்ள லண்டன் ஒலிம்பிக் போட்டியில் 410 பேருடன் ஆஸ்திரேலியா அணி பங்கேற்க உள்ளது. இதில் 224 வீரர்களும், 186 வீராங்கனைகளும் இடம் பெற்றுள்ளனர்.
இது குறித்து ஆஸ்திரேலியா ஒலிம்பிக் குழு தலைவர் ஜான் காட்ஸ் கூறியதாவது,
கடந்த ஆண்டு(2011) பிப்ரவரியில் நடத்திய ஆய்வில் லண்டன் ஒலிம்பிக் போட்டியில் பதக்க பட்டியலில் 8வது இடம் பெறலாம் என்ற நிலையில் இருந்தோம். ஆனால் சமீபத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள், வீராங்கனைகள் திறனில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் களமிறக்கப்படும் வீரர்களில் 40 முதல் 46 சதவீதம் பேர் பதக்கம் வென்று, பதக்க பட்டியலில் 5 இடத்திற்கு வருவோம் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.
இதேபோல கடந்த 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் அதிகபட்சமாக 639 வீரர்கள், வீராங்களை களமிறக்கிய சீனா சாதனை படைத்தது. ஆனால் லண்டன் ஒலிம்பிக் போட்டியில் மொத்தம் 396 பேர் தான் பங்கேற்க உள்ளனர். இதில் 243 பேர் தடகள விளையாட்டுகளில் பங்கேற்க உள்ளனர்.
இது குறித்து சீன விளையாட்டு அமைச்சர் லியூ பெங் கூறியதாவது,
ஒலிம்பிக் போட்டியில் உலகம் முழுவதும் இருந்து வந்துள்ள விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பதக்கம் பெற வேண்டும் என்ற குறிக்கோளுடன் கடும் பயிற்சி பெற்றுள்ளனர். எனவே சீனா அணி கடும் சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது. சீனா தடகள வீரர்கள் சவால்களை வென்று, பதக்கங்களை பெற முயற்சி செய்ய வேண்டும். ஒவ்வொரு தங்கப்பதக்கம் பெறுவதற்கும் சீனா வீரர்கள் கடுமையாக போராட வேண்டும் என்றார்.
முன்னதாக கடந்த 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் 51 தங்கப்பதக்கங்களை வென்ற சீனா பதக்க பட்டியலில் முதலிடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது.