
ஸ்ரீஹரிகோட்டா: செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைக்கோளை அனுப்பும் திட்டத்துக்கு விரைவில் அரசு அனுமதி கிடைத்துவிடும் என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தலைவர் கே. ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைக்கோளை அனுப்பும் திட்டத்துக்கான அனுமதி பெறுவதில் கடைசிக் கட்டத்துக்கு இப்போது வந்துள்ளோம். இத்திட்டத்துக்கு அரசிடமிருந்து அனுமதி கிடைத்ததும் பணிகள் தொடங்கப்படும். அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் இத்திட்டத்தைச் செயல்படுத்த முடிவு செய்துள்ளோம்.
இந்தத் திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்துவதற்கான அறிவியல் ரீதியான சாத்தியக்கூறுகள் அடங்கிய வரைவுத் திட்டம் அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின்படி, பி.எஸ்.எல்.வி - எல்.எக்ஸ் ராக்கெட் மூலம் செயற்கைக்கோளை அனுப்பி, செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அந்த கிரகம் பற்றிய தகவல்களை சேகரிக்க முடியும். குறிப்பாக அங்கு நிலவும் சீதோஷ்ண நிலை, புவியியல் அமைப்பு, உயிர் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகள் குறித்த தகவல்களை இந்தச் செயற்கைக்கோள் மூலம் திரட்ட முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.










