திருநெல்வேலி: மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் போராட்டத்தின் எதிரொலியாக நெல்லை அண்ணா தொழில்நுட்ப கல்லூரி மையத்தில் மீண்டும் மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது.
நெல்லை அண்ணா பல்கலை கழக பொறியியல் தொழில்நுட்ப கல்லூரி நெல்லை மையம் 2007ம் ஆண்டு அறிவிக்கப்பட்டு 2008ம் ஆண்டு முதல் முழு அளவில் மாணவர்கள் சேர்க்கையுடன் செயல்படத் தொடங்கியது. இந்நிலையில் இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை கவுன்சிலின் போது நெல்லை மையம் திடீரென நீக்கப்பட்டிருந்தது.
இது மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இளங்கலை ஜியோ இன்பார்மெட்டிஸ், இன்பார்மேஷன் டெக்னலாஜி ஆகிய பாடபிரிவுகள் சென்னை பல்கலை கழகத்திற்கு அடுத்தப்படியாக நெல்லை மையத்தில் மட்டுமே உள்ளது. ரூ5 ஆயிரம் கட்டணத்தில் கல்வி கற்கும் வாய்ப்பு பறிபோவதைக் கண்டித்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து நேற்று நெல்லை அண்ணா தொழில்நுட்ப கல்லூரி மையத்தில் மாணவர் சேர்க்கை மீண்டும் நேற்று தொடங்கியது.










