சென்னை: சரியாக வேலை கிடைக்காததால் விரக்தி அடைந்த ஒருவர் தனது கையை பிளேடால் அறுத்துக் கொண்டு சாலையில் ஓடி, கூவம் ஆற்றில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை புதுப்பேட்டை பகுதியில் வசித்து வந்தவர் தாஸ். கூலித் தொழிலாளி. சரியாக வேலை கிடைக்கவில்லை. குடிப்பழக்கம் வேறு இருந்துள்ளது. இவருக்கு புஷ்பா என்ற மனைவியும், நான்கு பெண் குழந்தைகளும் உள்ளனர்.
சரியாக வேலை கிடைக்காததால் வேதனையில் இருந்து வந்த தாஸ் இன்று காலை திடீரென தனது கையை பிளேடால் அறுத்துக் கொண்டார். பின்னர் ரத்தம் கொட்டக் கொட்ட கூவம் ஆற்றை நோக்கி ஓடினார். அவரைப் பிடிக்க பலரும் முயன்றனர். ஆனால் முடியவில்லை. சிந்தாதிரிப்பேட்டை பார்க்குக்குள் புகுந்து கூவத்தில் குதித்து விட்டார்.
கூவம் ஆற்றில் அவர் குதித்ததால் யாரும் உள்ளே குதித்து காப்பாற்ற முயலவில்லை. தீயணைப்புப் படையினர் விரைந்து வந்தனர். அவர்கள் தாஸின் உடலைத் தேடி வருகின்றனர்.
தாஸ் செய்த செயலைப் பார்த்து அவரது நான்கு பெண் குழந்தைகளும், மனைவியும் கதறி அழுததால் அந்தப் பகுதியே பெரும் சோகமாக காணப்பட்டது.










