
டெல்லி: பெங்களூரில் நடைபெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை நாள்தோறும் கண்காணிக்க வேண்டும் என்று திமுக பொதுச்செயலாளர் க. அன்பழகன் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை மற்றும் சசிகலாவுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், இந்த வழக்கை உச்சநீதிமன்றம் நாள்தோறும் கண்காணிக்க வேண்டும். சசிகலாவும் ஜெயலலிதாவும் வழக்கு விசாரணையை மிகவும் தாமதப்படுத்துகிறார்கள். இதனால் உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் இந்த விசாரணை கொண்டுவரப்பட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.
இம்மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் இது தொடர்பாக 4 வாரத்தில் பதில் அளிக்குமாறு தமிழக லஞ்ச ஒழிப்புத் துறைக்கும் சசிகலாவுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மேலும் கூடுதல் ஆவணங்களைக் கேட்டு சசிகலா தாக்கல் செய்த மனு விசாரணையின் போது தங்கள் தரப்பு கருத்தையும் கேட்க வேண்டும் அன்பழகனின் கோரிக்கையையும் உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது.
இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை ஆகஸ்ட் 13-ந் தேதிக்கு ஒத்திவைக்கபப்ட்டுள்ளது.










