கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்கு நினைவஞ்சலி
கடந்த 2004-ம் ஆண்டு ஜூலை 16-ந்தேதி கும்பகோணம் காசிராமன் தெருவில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா பள்ளியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் பள்ளியில் இருந்த 94 குழந்தைகள் தீயில் கருகி பலியானார்கள். அந்த கொடூர சம்பவம் பெற்றோர்களை மட்டுமல்ல அனைவரது நெஞ்சையும் உலுக்கியது.
நெருக்கடியான இடத்தில் இயங்கிய பள்ளியில் 900-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்துவந்தனர். தீ விபத்து ஏற்பட்ட உடன் மாணவர்கள் வெளியேற சரியான வழி இல்லாத காரணத்தினால்தான் 94 பிஞ்சு குழந்தைகளும் தீயில் கருகி இறந்தனர், நெரிசலில் சிக்கி 18 குழந்தைகள் படுகாயம் அடைந்தனர். அந்த துயரச் சம்பவம் நிகழ்ந்து இன்றுடன் எட்டு ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது.
நினைவு தினத்தை முன்னிட்டு, குழந்தைகளின் உருவப்படம் பொறித்த டிஜிட்டல் போர்டு வைத்து, மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அந்த படத்திற்கு உயிரிழந்தவர்களின் பெற்றோர்களும், உறவினர்கள் மலர் தூவி, மெழுகுவத்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். குழந்தைகளின் உயிரிழப்பிற்கு காரணமானவர்களுக்கு கண்டிப்பாக தண்டனை கிடைத்தே ஆகவேண்டும் என்று கண்ணீருக்கிடையே பெற்றோர்கள் தெரிவித்தனர்.
குழந்தைகளின் நினைவாக மாலை 5 மணிக்கு கும்பகோணம் மகாமக குளத்தில் 94 குழந்தைகளின் பெற்றோர் மோட்ச தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் உயிரிழந்த மாணவர்களின் பெற்றோர்களோடு பொதுமக்கள் பலரும் பங்கேற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே தீவிபத்து சம்பவம் தொடர்பாக பள்ளி தாளாளர் புலவர் பழனிச்சாமி, அவரது மனைவி சரஸ்வதி உள்பட 17 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்கக்கோரி 17 பேரும் தஞ்சை செசன்சு நீதிமன்றத்தில் மனு செய்திருந்தனர். இதனை விசாரித்த நீதிபதி மனுவை தள்ளுபடி செய்து உத்தர விட்டார். இதனையடுத்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் குற்றம்சாட்டப்பட்ட 17 பேரும் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில் பள்ளியில் நடந்தது விபத்து. இந்த தீ விபத்தில் குழந்தைகள் பலியானதற்கு நாங்கள் காரணம் அல்ல. எனவே எங்களை இந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனு கடந்த இரு தினங்களுக்கு முன்பு நீதிபதி ஆறுமுகச்சாமி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி போலீசார் தரப்பில் கொடுக்கப்பட்டுள்ள வழக்கு ஆவணங்களை பார்க்கும்போது முகாந்திரம் இருப்பதாக கருத வேண்டியுள்ளது. எனவே மனுதாரர்கள் 17 பேரும் விசாரணையை சந்திக்க வேண்டும் என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதனையடுத்து பள்ளி தீவிபத்திற்கு காரணமான குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.