இம்பால்: மணிப்பூரில் பல்வேறு தடை செய்யப்பட்ட ஆயுதக் குழுக்களைச் சேர்ந்த 72 பேர் இன்று சரணடைந்துள்ளனர்.
மணிப்பூர் முதல்வர் இபோபி சிங் முன்னிலையில் அனைவரும் தங்களது ஆயுதங்களை ஒப்படைத்தனர். அசாம் ரைபிள்ஸ் (தெற்கு) தலைமையகத்தில் இதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் இபோபி சிங், ஆயுதம் தாங்கிய நபர்கள் தற்போது சரியான முடிவு எடுத்து ஜனநாயகப் பாதைக்குத் திரும்பியுள்ளனர். அவர்களின் மேம்பாட்டுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும். ஆயுதம் தாங்கியோரை ஜனநாயகப் பாதைக்கு திரும்ப வைத்ததில் அசாம் ரைபிள்ஸ் படையின் பங்கு பாராட்டுக்குரியது என்றார் அவர்.
தீவிரவாதிகள் ஒப்படைத்த ஆயுதங்களில் பெரும்பாலானவை ஏகே 47 துப்பாக்கிகள் மற்றும் ஜி-3 ரைபிள்கள்.
இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள ஐக்கிய தேசிய விடுதலை முன்னணி, மக்கள் விடுதலை ராணுவம், கங்கிலாக் கம்யூனிஸ்ட் கட்சி, கங்லி யாவோல் கான் லுப், கங்லிபாக் மக்கள் புரட்சிகர கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகிய ஆயுதக் குழுக்களைச் சேர்ந்தோரே இன்று சரணடைந்திருக்கின்றனர்.
கடந்த ஏப்ரல் மாதம் 30-ந் தேதி இதேபோல் 103 தீவிரவாதிகள் சரணடைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.





















