
டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு முடிந்துவிட்ட நிலையிலும்கூட ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் பஞ்சாயத்து ஓயவில்லை. மன்மோகன்சிங் அமைச்சரவையில் பிரதமருக்கு அடுத்த இடம் யாருக்கு என்ற விவகாரம் பெரிதாகி அமைச்சர் பொறுப்பிலிருந்து விலகுவதாக சரத்பவார் தமது ராஜினாமா கடிதத்தை மன்மோகன்சிங்குக்கு அனுப்பி வைத்துள்ளார்.
மன்மோகன்சிங் அமைச்சரவையில் பிரணாப் முகர்ஜி பிரதமருக்கு அடுத்து நம்பர் 2- என்ற தகுதியில் இருந்தார். சரத்பவார் 3-வது இடத்திலும் ஏ.கே. அந்தோணி 4-வது இடத்திலும் இருந்தார்.
பிரணாப் முகர்ஜி ராஜினாமா செய்துவிட்ட நிலையில் இயல்பாகவே 3-வது இடத்தில் உள்ள தமக்குத்தான் 2வது இடம் கிடைக்கும் என சரத்பவார் எதிர்பார்த்தார். ஆனால் மன்மோகன்சிங்கோ அந்த இடத்தை 4-வது இடத்தில் இருந்த ஏ.கே. அந்தோணிக்கு ஒதுக்கினார். அதாவது பிரதமருக்கு அடுத்த நம்பர் 2- தகுதியை ஏ.கே. அந்தோணிக்கு கொடுத்தார் மன்மோகன்சிங்.
இதில் சரத்பவார் கடும் அதிருப்தி அடைந்தார். இதனால் கடந்த வாரம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தை சரத்பவார் புறக்கணித்தார். குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் பெயரை அறிவிக்கும் கூட்டத்தையும் புறக்கணித்தார். இந்நிலையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலும் சரத்பவார் மற்றும் தேசியவாத காங்கிரசின் மற்றொரு அமைச்சரான பிரபுல் பட்டேல் இருவரும் கலந்து கொள்ளவில்லை.
மேலும் இருவரும் தங்களது பதவி விலகல் கடிதத்தை நேற்று மாலையே பிரதமர் மன்மோகன்சிங்குக்கு அனுப்பிவிட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் மன்மோகன்சிங் இந்த ராஜினாமாவை ஏற்கவில்லை என்றும் தெரிகிறது.
தேசியவாத காங்கிரஸ் கட்சியை காங்கிரஸ் கட்சி அவமதித்துவிட்டதாக அக்கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.


















