
டெல்லி: விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் அஜீத் சிங்கின் அலுவலகத்தில் நேற்று அதிகாலையில் தீவிபத்து ஏற்பட்டது. ஆனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மேலும் கோப்புகள் எதுவும் எரிந்து பாதிக்கப்படவில்லை.
டெல்லி சப்தர்ஜங் விமான நிலையத்தை அடுத்த ராஜீவ் காந்தி பவனின் முதல் தளத்தில் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சக அலுவலகம் உள்ளது. அங்குள்ள காலியான ஒரு அறையில் நேற்று அதிகாலை 5 மணியளவில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைத்தனர். தீவிபத்து ஏற்பட்ட அறை பயன்படுத்தப்படாமல் இருந்ததால், யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மேலும் கோப்புகள் எதுவும் எரிந்து நாசமாகவில்லை.
மின் கசிவினால் தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. இருப்பினும் தீவிபத்திற்கான காரணம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. மேலும் தீவிபத்துகளை தவிர்க்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது.


















