விழுப்புரம் : கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் நடந்த பஸ் எரிப்பு வழக்கில் ஜாமீன் பெறுவதற்காக விழுப்புரம் நீதிமன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் சரணடைந்தார். அவருக்கு விழுப்புரம் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
கடந்த 1.6.2000ம் ஆண்டு புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் நோக்கி அரசு போக்குவரத்துக் கழகப் பஸ் சென்று கொண்டிருந்தது. விழுப்புரம்-புதுச்சேரி சாலையில் எல்.ஆர்.பாளையம் அருகில் பஸ் வந்த போது பஸ்சில் இருந்த திருபுவனையைச் சேர்ந்த மணிபாலன், பத்மநாபன், சந்திரசேகர், திருமா இளங்கோ, எட்டியான் என்கிற வேங்கையன், விஜயன், விழுப்புரம் சுரேந்திரன், சித்தாமூர், சுப்பிரமணி, பாசறை பாலு, சண்முகம், விஜி, தேவநாதன், பார்த்தசாரதி, வடிவேலன், சவுந்திரராஜன், பெருமாள், மகேந்திரன் ஆகியோர் பஸ் ஓட்டுனர் மோகனை தாக்கி பஸ்சை நிறுத்த கூறினர்.
மேலும் பஸ்சில் இருந்தவர்களை அடித்து, உதைத்து, வெட்டி கொலை செய்யுங்கள் என்றும், பஸ்சை கொளுத்துங்கள் என்று கூறியதாக கூறப்படுகின்றது. இதை தடுக்க முயன்ற பஸ் நடத்துநர் ஆறுமுகத்தை தலையில் வெட்டினர். ஓட்டுநர் மோகனை தடியால் தாக்கினர்.
அதன்பிறகு பஸ் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்திவிட்டு, தீ வைத்து கொளுத்திவிட்டு ஆறுமுகத்திடம் இருந்த ரூ.5,500 பணத்தையும் பறித்துக் கொண்டு தப்பியோடிவிட்டனர்.
இது குறித்து வளவனூர் போலீசார் மணிபாலன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்பட 20 பேர் மீது வழக்கு பதிவு செய்தார். இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றம் எண்-2ல் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கு விசாரணையின் போது, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உட்பட 4 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்தனர். இதனையடுத்து விழுப்புரத்தை சேர்ந்த சுரேந்திரன், சித்தாமூர் சுப்ரமணி, பாசறை பாலு, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆகிய 4 பேருக்கும், மாஜிஸ்திரேட்டு எல்.கலைவாணி பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டார்.
இதையடுத்து கடந்த 13ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் போலீசார் தன்னைக் கைது செய்ய கூடாது என்று கூறி தொல்.திருமாவளவன் மனு தாக்கல் செய்தார். அப்போது மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் தொல்.திருமாவளவன் சரணடைந்து ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம் என்று நீதிபதி கூறினார்.
இதனையடுத்து விழுப்புரம் நீதிமன்றத்தில் தொல்.திருமாவளவன் நேற்று சரணடைந்தார். இதனையடுத்து இந்த வழக்கில் திருமாவளவனுக்கு மாஜிஸ்திரேட்டு கலைவாணி நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.










