சென்னை: சென்னையில் உள்ள மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய அன்னா ஹசாரேவின் ஆதரவாளர்கள் 100 பேர் கைது செய்யப்பட்டனர்.
வலுவான லோக்பால் மசோதா வேண்டியும், ஊழலுக்கு எதிராகவும் அன்னா குழுவினர் கடந்த 25ம் தேதி முதல் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இந்நிலையில் அன்னா ஹசாரேவும் இன்று தனது காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை துவங்கியுள்ளார். அவரது குழுவினர் கடந்த 4 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்தபோது காற்று வாங்கிய ஜந்தர் மந்தர் மைதானத்தில் இன்று மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.
இதற்கிடையே அன்னா ஆதரவாளர்கள் அதாவது இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கத்தைச் சேர்ந்த 100 பேர் அதன் ஒருங்கிணைப்பாளர் ராதிகா கணேஷ் தலைமையில் இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் வீட்டை முற்றுகையிட்டு அவருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
அவர்கள் அங்கேயே அமர்ந்து கொண்டு 15 ஊழல் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ப.சிதம்பரம் உறுதியளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட 100 பேரை கைது செய்தனர்.
மத்திய அமைச்சர்களில் 15 பேர் ஊழல்வாதிகள் என்று அன்னா குழுவினர் குற்றம்சாட்டியுள்ளனர். அவர்கள் பிரதமர் மன்மோகன் சிங், ப.சிதம்பரம் மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபல் ஆகியோருக்கு எதிராக ஊழல் ஆதாரங்களை வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


















