
சென்னை: மாணவி ஸ்ருதி பரிதாபமாக உயிரிழந்ததைத் தொடர்ந்து மூடப்பட்டுள்ள சென்னை ஜியோன் மேல்நிலைப்பள்ளியைத் திறக்கக் கோரி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பெற்றோர் பள்ளி முன்பு போராட்டத்தில் இறங்கினர். இதையடுத்து நாளை பள்ளி திறக்கப்படுவதாக பள்ளி நிர்வாகம் கூறியுள்ளது.
சென்னை சேலையூரில் உள்ள ஜியோன் மேல்நிலைப்பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஸ்ருதி, தான் பயணித்த பள்ளிப் பேருந்தில் இருந்த ஓட்டை வழியே கீழே விழுந்து அதே பேருந்தில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தாள்.
இதையடுத்து பள்ளி மூடப்பட்டுள்ளது. இந்தப் பள்ளி தவிர மாடம்பாக்கம், செம்பாக்கம் ஆகிய இடங்களில் உள்ள இதன் கிளைப் பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. இதனால் பெற்றோர்களும், மாணவர்களும் குழப்பமடைந்துள்ளனர்.
இந்த நிலையில் சேலையூர் மெயின் பள்ளிக்கு இன்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெற்றோர்கள் திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளியை உடனே திறக்க வேண்டும், மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படாமல் உறுதி செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து நாளை முதல் அனைத்து ஜியோன் பள்ளிகளும் வழக்கம் போல இயங்கும் என்று பள்ளி நிர்வாகம் அறிவித்தது.
பேருந்துகள் கிடையாது
அதேசமயம், மறு உத்தரவு வரும் வரை பள்ளிப் பேருந்துகள், வேன்கள் இயக்கப்பட மாட்டாது என்றும் ஜியோன் நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும் 2 பேர் கைது
இதற்கிடையே, ஸ்ருதி வழக்கில் ஜியோன் பள்ளி நிர்வாகிகள் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பேருந்துகளில் ஆய்வு
இந்த நிலையில், ஜியோன் பள்ளிக்குச் சொந்தமான 32 பேருந்துகளையும், போக்குவரத்து ஆய்வாளர்கள் குழு சோதனையிட்டது. இதில் நான்கு பேருந்துகளில் விதி மீறல் இருப்பதாக தெரிவித்த அதிகாரிகள் அதை சரி செய்த பின்னரை அவற்றை இயக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.





















