நெல்லை: நாங்குநேரி அருகே வாலிபரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற இன்ஸ்பெக்டர் விஜயகுமாரின் உயிருக்கு ஆபத்து இருப்பதால் அவரை ஜீப்பில் வைத்து கொண்டு போலீசார் வலம் வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே மறுகால்குறிச்சியில் மணல் அள்ளும் பிரச்சனை தொடர்பாக இன்ஸ்பெக்டர் விஜயகுமார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அப்பகுதியைச் சேர்ந்த வானுமாமலை என்ற இளைஞர் குண்டு பாய்ந்து இறந்தார். மாமூல் வசூலிப்பது தொடர்பாக இந்த படுகொலை அரங்கேறியிருப்பதாக பல தரப்பினரும், அரசியல் கட்சியினரும் குற்றம் சாட்டினர். மனித உரிமைக்கு எதிராக நடந்த இந்த சம்பவத்தில் நீதி விசாரணை கோரி அனைத்து தரப்பினரும் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் நடந்து 4 நாட்கள் ஆகியும் போலீசாரால் ஊருக்குள் நுழைய முடியவில்லை. மக்களிடையே துப்பாக்கிச்சூடு தொடர்பான பதற்றமும் தணியவில்லை. போலீசார் மீது ஆத்திரம் குறையாமல் இருப்பது பொது மக்களின் பேச்சிலேயே தெரிகிறது. அப்பகுதியில் இரவு நேரங்களில் இளைஞர்களின் நடமாட்டமும் உள்ளது. நாங்குநேரி போலீசாருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் தொடர்ந்து அங்குள்ள காவல் நிலையம், அனைத்து மகளிர் காவல் நிலையம், டி.எஸ்.பி. அலுவலகம் மற்றும் மூன்றடைப்பு காவல் நிலையம் ஆகியவற்றுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதற்கிடையே வானுமாமலையை சுட்டுக்கொன்ற விஜயகுமாரின் குடும்பத்தார் ஏற்கனவே பாதுகாப்பான பகுதிக்கு மாற்றப்பட்டுவி்ட்டனர். இன்ஸ்பெக்டர் உயிருக்கும் அச்சுறுத்தல் இருப்பதால் அவரை ஒரே இடத்தில் வைக்காமல் ஜீப்பில் வைத்து கொண்டு போலீசார் வலம் வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.










