
திருச்சி: ஈழத் தமிழர் படுகொலைக்கு துணை போன திமுக தலைவர் கருணாநிதி எந்த முகத்தை வைத்துக் கொண்டு டெசோ மாநாட்டை நடத்துகிறார் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.
திருச்சியில் மதிமுக நிர்வாகிகளிடையே அவர் பேசியதாவது:
மாவீரர் திலகம் பிரபாகரனின் தயார் பார்வதி அம்மாள் மருத்துவ சிகிச்சைக்காக தமிழகம் வந்த போது அந்த வயதான தாயாரை தடுத்து நிறுத்தியவர் அப்போது தமிழக முதல்வராக இருந்த திமுக தலைவர் கருணாநிதிதான். அவர்தான் இப்போது தமிழீழ ஆதரவாளர்கள் மாநாட்டை நடத்துகிறார். இது மக்களை ஏமாற்றும் நடவடிக்கை. ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட போது உடந்தையாக இருந்து துரோகம் செய்தவர் கருணாநிதி. இப்போது எந்த முகத்தை வைத்துக் கொண்டு அவர் டெசோ மாநாட்டை நடத்துகிறார்? திராவிட இயக்கக் கொள்கைகளைப் பின்பற்றுவதில் தமிழீழக் கோரிக்கையிலும் எப்போதும் உறுதியாக இருப்பது மறுமலர்ச்சி திமுகதான்.
நாங்கள் தேர்தலில் போட்டியிடாத போதும் மக்கள் பிரச்சனைகளுக்காக போராடுகிற இயக்கம். பொதுமக்களிடம் கட்சி நிர்வாகிகள் தங்களது தொலைபேசி எண்ணை கொடுத்து வைத்திருங்கள். அப்போதுதான் மக்கள் பிரச்சனைகளின் போது உடனே நம்மை தொடர்பு கொள்வார்கள்.
கரூரில் வரும் செப்டம்பர் 15-ந் தேதி நடைபெற உள்ள மறுமலர்ச்சி திமுகவின் மாநாடு தமிழக அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்றார்.
பின்னர் திருச்சி மாவட்ட மதிமுக சார்பி கரூர் மாநாட்டு நிதியாக ரூ12 லட்சம் வைகோவிடம் ஒப்படைக்கப்பட்டது.










