ஊருக்குள் ஹாயாக வந்து செல்லும் சிறுத்தை: விவசாயிகள் பீதி
நெல்லை மாவட்டம் களக்காடு மேற்குத் தொடர்ச்சி மலையில் புலிகள் காப்பகம் அமைக்கப்பட்டு வனவிலங்குகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இங்கு வாழும் வனவிலங்குகள் அடிக்கடி மலையடிவாரத்தில் உள்ள கிராமங்களுக்குள் புகுவது வழக்கம். இந்நிலையில் தலையணை மலையடிவாரத்தில் உள்ள சிவபுரம், கள்ளியாறு, கடுவாய்போர்விலை பகுதியில் கடந்த இரு மாதங்களாக சிறுத்தை ஒன்று அட்டகாசம் செய்து வருகிறது. முதலில் இரவில் மட்டுமே தோட்டங்களில் புகுந்து நாய்களை வேட்டையாடிய சிறுத்தை தற்போது பகல் நேரங்களிலும் துணிச்சலாக வந்து நாய்களை அடித்துக் கொன்று இழுத்துச் செல்கிறது.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில்,
துவகத்தில் சிறுத்தை ஆட்களை கண்டால் பயந்தது. நாய்களை வேட்டையாடும்போது நாங்கள் கூட்டமாக சென்றால் ஓடிவிடும். ஆனால் அது தற்போது ஆட்களை கண்டால் பயப்படுவது இல்லை. எங்கள் கண் முன்னாலேயே நாய்களை வேட்டையாடுகிறது. மேலும் பகலிலும் சர்வ சாதாரணமாக வந்து செல்கிறது. இதனால் அது ஆட்களை எந்த நேரம் தாக்குமோ என பயமாக உள்ளது. அதனை கூண்டு வைத்து பிடிக்க வனதுறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.