கலவரம் பாதித்த அசாமில் ராணுவம் மீது வெடிகுண்டு தாக்குதல்: ஒருவர் பலி, 7 பேர் படுகாயம்
கோல்பரா: அசாம் மாநிலத்தில் ராணுவத்தை குறிவைத்து நடத்தப்பட்ட சக்தி வாய்ந்த வெடிகுண்டு தாக்குதலில் ஒரு ஜவான் பலியானார். மேலும் 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
அசாம் மாநிலத்தில் கலவரம் வெடித்ததையடுத்து அங்கு ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். லட்சக் கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர். கலவரப் பகுதிகளை பிரதமர் மன்மோகன் சிங் கடந்த சனிக்கிழமையும், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் நேற்றும் பார்வையிட்டனர்.
இந்நிலையில் இன்று பகல் 12 மணிக்கு மேல் கோல்பரா மாவட்டத்தில் ராணுவத்தாரை குறிவைத்து சக்தி வாய்ந்த வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஒரு ஜவான் உயிர் இழந்தார். மேலும் 7 பேர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
கலவரத்தை கட்டுப்படுத்த வந்த ராணுவத்தினரை குறி வைத்து நடந்த தாக்குதலால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.