மதுரை தனியார் மருத்துவமனையில் +2 மாணவிக்கு மயக்க ஊசிபோட்டு கற்பழிக்க முயன்ற டாக்டர்
மதுரை: மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் டாக்டர் ஒருவர் பிளஸ் டூ மாணவிக்கு மயக்க ஊசி போட்டு அவரை கற்பழிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையை அடுத்த கரிசல்பட்டியைச் சேர்ந்தவர் 16 வயது பெண் தேவி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). பிளஸ் டூ படித்து வருகிறார். கடந்த சில நாட்களாக் உடல் நலக் குறைவால் அவதிப்பட்ட அவரை அவரது சகோதரி மற்றும் சகோதரியின் கணவர் ஆகியோர் மதுரை, சொக்கலிங்கம் நகரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
கடந்த 2 நாட்களாக அவர் மருத்துவமனைக்கு சென்று ஊசி போட்டுக் கொண்டு, மாத்திரைகள் வாங்கி சாப்பிட்டார். நேற்று மாலையும் மருத்துவமனைக்கு சென்ற அவருக்கு டாக்டர் சங்கரநாராயணன் ஊசி போட்டார். ஊசி போட்டதால் மயக்கம் ஏற்படும் என்று கூறிய டாக்டர் தேவியை சற்று நேரம் ஓய்வெடுத்துவிட்டு போகுமாறு தெரிவித்தார். இதையடுத்து தேவியை ஒரு அறையில் இருந்த கட்டிலில் படுக்க வைத்துவிட்டு அவரது சகோதரியும், சகோதரியின் கணவரும் பழங்கள் வாங்கச் சென்றுவிட்டனர்.
அப்போது தனியாக இருந்த தேவியை டாக்டர் சங்கரநாராயணன் கற்பழிக்க முயன்றார் என்று கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த தேவி அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தார். அந்த நேரம் பழங்கள் வாங்கச் சென்றவர்களும் திரும்பி வர தேவி அவர்களிடம் நடந்ததைக் கூறினார். இதைக் கேட்டு ஆத்திரம் அடைந்த அவர்கள் டாக்டரை சத்தம் போட்டனர். இதற்கிடையே மருத்துவமனை முன்பு ஏராளமான மக்கள் கூடினர். அடி, உதை விழும் என்று அஞ்சிய டாக்டர் ஒரு அறைக்குள் சென்று கதவைப் பூட்டினார்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று டாக்டரை வெளியே வருமாறு அழைத்தனர். ஆனால் அவர் வராததையடுத்து கதவை உடைத்து டாக்டரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.