சென்னை: விபத்தில் சிக்கிய தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் தீயணைப்புக் கருவிகள் கூட இல்லை என்று விபத்தி்ல் சிக்கி மீண்டவர்களும், ரயிலில் பயணித்தவர்களும் கூறியுள்ளனர்.
டெல்லியிலிருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று அதிகாலையில் நெல்லூரில் தீவிபத்தில் சிக்கியது. அதில் எஸ். 11 பெட்டி முழுக்க எரிந்து போனது. இந்தக் கோர விபத்தில் 50 பயணிகள் உயிரிழந்தனர்.
தீவிபத்தில் படுகாயமடைந்த பலரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் சிக்கி மீண்ட சில பயணிகள் கூறுகையில்,
அதிகாலை 3.45 மணிக்கு எஸ்.11 பெட்டியில் தீவிபத்து ஏற்பட்டது. இதனை எவரும் உடனடியாக கவனிக்கவில்லை. இதனால் தீப்பிடித்த நிலையில் சுமார் 5 கி.மீ. தூரம் வரையிலும் ரயில் ஓடியதால் அதிக காற்று காரணமாக தீ பெட்டி முழுவதும் பற்றி எரிந்தது. இதில் சிக்கி 45 பேருக்கு மேல் எரிந்து இறந்திருக்க கூடும். அதிகாலை என்பதால் இருள் சூழ்ந்து காணப்பட்டதால் எரிந்த பெட்டியிலிருந்தவர்களை உடனடியாக காப்பாற்ற முடியவில்லை. ரயில்வே நிர்வாகத்தினரும் காலை 5 மணிக்கு தான் உதவிக்கு வந்தனர். வந்த உடன் தீப்பிடித்த பெட்டியை ரயிலில் இருந்து கழட்டி விட்டனர்.
கதவுகளும் பழுதடைந்திருந்ததால் சம்பந்தப்பட்ட பெட்டிகளில் உள்ளவர்களால் உடனடியாக வெளியே வரமுடியவில்லை. தீ பற்றி எரிந்த பெட்டியிலிருந்த குழந்தைகள் மற்றும் பெரியவர்களால் பெட்டியிலிருந்து அபாயக்குரல் மட்டுமே எழுப்ப முடிந்தது. அவர்களால் பெட்டியிலிருந்து உயிர்தப்பிக்க முடியவில்லை. காயமடைந்தவர்களை நெல்லூரில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். வரும் காலங்களில் இதுபோன்று விபத்துக்கள் நடக்காமல் இருக்க தீ தடுப்பு கருவிகள் அனைத்து பெட்டிகளிலும் வைக்க வேண்டும் என்றார்கள்.
ரயில் பெட்டிகளில் குறிப்பாக நீண்ட தூரம் போகும் இதுபோன்ற ரயில்களில் தீயணைப்புக் கருவிகள் உள்ளிட்ட அடிப்படை பாதுகாப்பு விஷயங்கள் கூட இல்லை என்பது பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.





















