சென்னை: பெருமாள் கோவிலுக்குச் சொந்தமான 90 பவுன் நகைகளைத் திருடிய வழக்கில் கைதான
தூத்துக்குடி மாவட்ட அதிமுக விவசாய அணி பொருளாளரை கட்சியை விட்டு நீக்கியுள்ளார் முதல்வரும் கட்சியின் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அ.தி.மு.கவின் கொள்கை- குறிக்கோள்களுக்கும் கோட்டபாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழக கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும்,
விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த, தூத்துக்குடி மாவட்ட அதிமுக விவசாய அணி பொருளாளர் கே.துரைபாண்டியன் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். அ.தி.மு.கவினர் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ள கூடாது எனக் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறப்பட்டுள்ளது.
தூத்துக்குடி வைகுண்ட பெருமாள் கோவிலுக்குச் சொந்தமான 90 பவுன் நகைகள் திருட்டுப் போன வழக்கில் துரைப்பாண்டியை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு போலீசார் கைது செய்யதனர் என்பது குறிப்பிடதக்கது.










