சென்னை: இளைஞர் காங்கிரசார் குண்டர்களைப் போன்று உள்ளனர் என்று டுவிட்டரில் தெரிவித்துள்ள அன்னா ஹசாரே ஆதரவாளர் ரமேஷ் சேதுராமன் என்பவர் மீது மத்திய சென்னை இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ரஞ்சன் குமார் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.
மத்திய சென்னை இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ரஞ்சன் குமார் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு நிர்வாகிகளுடன் சென்றார். அங்கு இருந்த அதிகாரிகளிடம் அவர் புகார் மனு ஒன்றை அளி்த்தார்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது,
நுங்கம்பாக்கத்தில் உள்ள மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் வீட்டு முன்பு அன்னா ஹசாரே ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். இது குறித்து பேட்டி அளித்த நான், அன்னா ஹசாரே ஆதரவாளர்களுக்கு கண்டனம் தெரிவித்தேன். இது டி.வி.க்களில் வெளிவந்தது.
இதனை அன்னா ஹசாரே ஆதரவாளரான ரமேஷ் சேதுராமன் என்பவர் காப்பி எடுத்து டுவிட்டர் இணையதளத்தில் போட்டு விமர்சனம் செய்துள்ளார். அதில் இவர்களை பார்த்தால் இளைஞர் காங்கிரசார் மாதிரி தெரியவில்லை. குண்டர்கள்போல இருக்கிறார்கள் என்று கூறியுள்ள அவர், தலித் சமுதாயத்தினரை இழிவுபடுத்தும் வகையிலும் கருத்து கூறியுள்ளார். எனவே அவர் மீது எஸ்.சி.,எஸ்.டி. சட்டப்பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவி்த்துள்ளார்.
பின்னர் ரஞ்சன் குமார் கூறுகையில்,
ரமேஷ் சேதுராமனின் கருத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தி. நகர் அம்பேத்கார் சிலை முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவோம் என்றார்.





















