
டெல்லி: பி.எம்.டபுள்.யூ காரில் வேகமாகச் சென்று 3 போலீசார் உள்பட 6 பேரைக் கொன்ற வழக்கில் சஞ்சீவ் நந்தா மத்திய அரசுக்கு ரூ.50 லட்சம் செலுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
முன்னாள் கடற்படை தளபதி எஸ்.எம். நந்தாவின் பேரன் சஞ்சீவ் நந்தா. அவர் கடந்த 1999ம் ஆண்டு டெல்லியில் தனது பி.எம்.டபுள்யூ காரில் வேகமாகச் சென்று 3 போலீசார் உள்பட 6 பேரைக் கொன்றார். இந்த வழக்கை விசாரித்த டெல்லி நீதிமன்றம் அவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதை எதிர்த்து அவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.
அவரது மனுவை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம் 5 ஆண்டு தண்டனையை 2 ஆண்டுகளாகக் குறைத்து உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து டெல்லி போலீசார் உச்ச நீதிமன்றத்திற்கு சென்றனர். அவர்களின் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் இன்று தனது தீர்ப்பை அளித்தது.
டெல்லி உயர் நீதிமன்றம் அளித்த 2 ஆண்டு சிறை தண்டனையை உறுதி செய்த உச்ச நீதிமன்றம் சஞ்சீவ் நந்தா ரூ.50 லட்சம் ரொக்கத்தை மத்திய அரசிடம் செலுத்த வேண்டும் என்றும், அந்த பணம் சாலை விபத்துகளில் பாதிக்கப்படுவோருக்கு பயன்படுத்தப்படும் என்றும் கூறியது. மேலும் அவர் 2 ஆண்டுகள் சமூக சேவை செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. ஆனால் அவர் எந்த வகையான சேவை செய்ய வேண்டும் என்பதை சமூகநீதி மற்றும் அதிகாரமளிப்புத் துறை அமைச்சகம் தான் முடிவு செய்ய வேண்டும். அந்த அமைச்சகம் சொல்லும்படி கேட்காவிட்டால் அவர் ஒரு ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்.
சஞ்சீவ் நந்தா ஏற்கனவே இரண்டு ஆண்டுகள் சிறையில் இருந்ததால் அவர் இனியும் சிறையில் இருக்கத் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.










