
மதுரை: மதுரைக்கு வந்த கர்நாடக துணை முதல்வர் ஈஸ்வரப்பா, தமிழிலேயே அம்மனை துதித்து பாடல்கள் பாடி வழிபட்டது அனைவரையும் வியக்க வைத்தது.
சமீபத்தில் கர்நாடக துணை முதல்வராக பொறுப்பேற்றவர் ஈஸ்வரப்பா. இவர் மதுரைக்கு வந்திருந்தார். பின்னர் மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் சென்ற அவர் பயபக்தியுடன் அன்னையையும், சொக்கநாதரையும் வழிபட்டார்.
மீனாட்சி அம்மன் சன்னிதானத்தில் வழிபட்ட அவர் தமிழிலேயே துதி பாடல்களைப் பாடி சாமி கும்பிட்டது அனைவரையும் வியக்க வைத்தது.
பின்னர் செய்தியாளர்கள் அவரைச் சந்தித்தனர். அவர்களுடன் தமிழிலேயே பேசினார் ஈஸ்வரப்பா. அப்போது அவர் கூறுகையில், மதுரையில் கர்நாடக மாநில பக்தர்கள் வந்து தங்கிச் செல்ல யாத்ரி நிவாஸ் என்ற தங்கும் விடுதி கட்ட உத்தேசித்துள்ளோம். அதுகுறித்து முயற்சிகள் எடுக்கப்படும் என்றார்.
மதுரைக்கு என்ன திடீர் பயணம் என்று செய்தியாளர்கள் கேட்டபோது, 25 வருடமாக மீனாட்சியம்மனை நான் வந்து தரிசித்துக் கொண்டிருக்கிறேன் என்றார் ஈஸ்வரப்பா.


















