கும்பகோணம் பள்ளி தீவிபத்து: 6 மாதத்திற்குள் விசாரணையை முடிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு
டெல்லி: கும்பகோணத்தில் 94 பள்ளி குழந்தைகள் உயிரிழக்க காரணமாக இருந்த தீவிபத்து வழக்கு விசாரணையை, ஆறு மாதத்திற்குள் நடத்தி முடிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2004ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் தேதி கும்பகோணத்தில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா என்ற தனியார் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 94 பிஞ்சு குழந்தைகள் உடல் கருகி பலியானர்கள். 8 ஆண்டுகளாக நடந்து வரும் இந்த வழக்கில் 25 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். இந்நிலையில் வட்டாச்சியர், மாவட்ட கல்வித்துறை அதிகாரி உள்பட 7 பேர் இந்த வழக்கில் இருந்து சென்னை உயர் நீதிமன்றம் விடுவித்தது.
இந்த நிலையில், வழக்கில் இருந்து தன்னை விடுக்க வேண்டும் என்று முன்னாள் தொடக்க கல்வித்துறை அதிகாரி பாலகிருஷ்ணனின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் பாலகிருஷ்ணன் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி கபாடியா கொண்ட அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறிய நீதிபதிகள் கல்வி அதிகாரியான பாலகிருஷ்ணன் வழக்கினை எதிர்கொள்ளவேண்டும் என்று கூறி அவரது மனுவை தள்ளுபடி செய்தனர். 8 ஆண்டுகளாக இழுத்துக்கொண்டிருக்கும் வழக்கை 6 மாதத்தில் முடிக்க தஞ்சாவூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்
உச்சநீதிமன்றத்தின் இந்த அதிரடி உத்தரவினால் வழக்கு விரைந்து முடிவுக்கு வந்து குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.