
கோலாலம்பூர்: மலேசிய இந்தியர்களின் அமைப்பான ஹிண்ட்ராப் மீதான தடையை நீக்க வேண்டும் என்று அந்த அமைப்பின் மூத்த தலைவரும் கடந்த சில ஆண்டுகளாக வெளிநாட்டில் வாழ்ந்துவிட்டு அண்மையில் மலேசிய திரும்பியவரான பி. வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.
ஹிண்ட்ராப் ஆதரவாளர்கள் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
ஹிண்ட்ராப்-பைக் கட்சி சார்பற்ற பாதையில் கொண்டு செல்லப் போகிறோம். ஹிண்டராப் இயக்கத்துக்குத் தலைமை தாங்கிய தமது மூத்த சகோதரர் பி உதயகுமாருடன் கருத்து வேறுபாடு ஏதும் இல்லை.
நாங்கள் மாறுபட்ட வியூகத்தையும் அணுகுமுறையையும் பின்பற்றுவதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அவர் சுதந்திரமான சிந்தனைகளைக் கொண்டுள்ளார். நானும் அவ்வாறே. பெரிய அமைப்புக்களில் கருத்து வேறுபாடுகள் நிலவுவது இயல்பானது
அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஹிண்ட்ராப்பின் அரசியல் பிரிவான மனித உரிமைக் கட்சிக்கு தலைமை தாங்க உதயகுமார் திட்டமிட்டுள்ளாரா என்பது பற்றி அவர்தான் விளக்க வேண்டும். அவர் அந்தக் கட்சிக்குத் தலைமைச் செயலாளர். நான் அந்தக் கட்சியைச் சேர்ந்தவன் அல்ல.
அவருக்குச் சொந்தமாக வியூகத்தை வைத்திருப்பது நிச்சயம் தாம் என்ன செய்கிறோம் என்பது அவருக்குத் தெரியும். நான் அதில் தலையிடமாட்டேன். ஆனால் என் வியூகம் நிச்சயம் மாறுபட்டது.
அரசியல் கட்சி சார்பற்ற நிலையே என்னுடையது. ஏழ்மையில் உள்ள இந்தியர்களுக்குப் போராடுவதே நமது கொள்கை. ஹிண்ட்ராப் மீதான தடையை நீக்குவதற்கான நேரம் வந்து விட்டது. எங்களை ஒர் அரசு சாரா அமைப்பாகவும் மனித உரிமை இயக்கமாகவும் செயல்படுவதற்கு அனுமதியுங்கள். பிரச்னைகளை தீர்ப்ப்பதற்கு நாங்கள் விவாதம் நடத்த தயார்.
இந்திய சமூகத்துடன் தொடர்பு கொள்வதற்கு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இப்போது மேற்கொள்ளும் முயற்சிகள் ஹிண்ட்ராப் எழுப்பிய பிரச்னைகள் நியாயமானவை என்பதைக் காட்டுகின்றது என்றார் அவர்.





















