சென்னை: ஆதிதிராவிட நலத்துறை நிதி மோசடி விவகாரத்தில் தலைமை ஆசிரியர்களை கைது செய்ய உத்தரவிட்ட நாமக்கல் மாவட்ட கலெக்டர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கைது செய்ய தயக்கம் காட்டுவது ஏன் என்று தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற தலைவர் மீனாட்சி சுந்தரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
ஆதிதிராவிட நலத்துறை நிதி மோசடியில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சம்பந்தப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதில் சம்பந்தப்பட்டுள்ள 77 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய நாமக்கல் கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
ஆனால் முறைகேட்டுக்கு மூலக் காரணமாக இருந்த ஆதிதிராவிட நலத்துறையில் பணியாற்றும் மாவட்ட நல அலுவலர், கண்காணிப்பாளர், பிரிவு எழுத்தர் ஆகியோரை கைது செய்ய தயக்கம் காட்டுவது ஏன்?
மாணவர்களுக்கான உதவித் தொகை விண்ணப்பங்கள் பலவற்றில் தலைமை ஆசிரியர்களின் கையெழுத்து இல்லை. சுகாதார ஆய்வாளர்களின் சான்றுகள் இல்லை. இருப்பினும் அவசர அவசரமாக ஆதிதிராவிட நலத்துறையின் எழுத்தர், கண்காணிப்பாளரின் சாதகமான குறிப்புகளுடன் உரிய அதிகாரி ஒப்புதல் கையெழுத்திட்டுள்ளார்.
பின்பு அவசரமாக அந்த காசோலைகள் தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பி, புரோக்கர்கள் மூலம் வங்கிகளில் மாற்றப்பட்டு பணம் பெறப்பட்டுள்ளது. இதற்கு காரணமாக இருந்தது அதிகாரிகள் தான்.
தலைமை ஆசிரியர்களை கைது செய்ய உத்தரவிட்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை, அலுவலக பணியாளர்களையும் கைது செய்ய ஏன் உத்தரவிடவில்லை என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.


















