
டெல்லி: கிரிக்கெட் சூப்பர் ஸ்டார் சச்சின் டெண்டுல்கர் இன்று முதல் முறையாக ராஜ்யசபா கூட்டத்தில் கலந்து கொண்டார். அவர் கலந்து கொண்ட முதல் நாளிலேயே பெரும் அமளியை துமளியைப் பார்த்து விட்டுக் கிளம்பினார்.
கடந்த ஏப்ரல் 26ம் தேதி நியமன ராஜ்யசபா உறுப்பினராக நியமிக்கப்பட்டார் சச்சின். இதையடுத்து ஜூன் மாதத்தில் பதவியேற்றார் சச்சின். இதையடுத்து இன்று கூடிய நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் சச்சின் முதல் முறையாக கலந்து கொண்டார். ராஜ்யசபாவுக்கு முதல் முறையாக வந்த அவருக்கு பல்வேறு கட்சிகளின் எம்.பிக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
அத்தனை எம்.பிக்களின் பார்வையும் இன்று சச்சின் மீதுதான் விழுந்திருந்தது. இதுகுறித்து சச்சின் கூறுகையில், இது எனக்குப் புதிய அனுபவம் என்றார்.
சச்சினுடன் அவரது மனைவி அஞ்சலியும் வந்திருந்தார். அவர் பார்வையாளர் வரிசையில் இருந்து தனது கணவரின் முதல் ராஜ்யசபா கூட்டத்தை பார்த்து மகிழ்ந்தார்.
ராஜ்யசபாவுக்கு மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் ராஜீவ் சுக்லாவுடன் அவரது காரில் வந்தார் சச்சின் என்பது குறிப்பிடத்தக்கது.





















