
சென்னை: முதல்வர் ஜெயலலிதா கொடநாட்டில் தங்கியிருப்பது குறித்து விமர்சனம் செய்த திமுக தலைவர் கருணாநிதி மீதும், முரசொலி பத்திரிக்கை, அதன் ஆசிரியர் செல்வம் மீதும் தமிழக அரசு அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளது.
சென்னை செசன்ஸ் நீதிமன்றத்தில் இன்று முதல்வர் ஜெயலலிதா சார்பில் சென்னை மாநகர அரசு வழக்கறிஞர் ஜெகன் தாக்கல் செய்த மனுவில்,
கடந்த மாதம் 30ம் தேதி வெளியான முரசொலி பத்திரிகையில் கலைஞரின் கேள்வி-பதில் பகுதியில் முதல்வர் ஜெயலலிதா கொட நாட்டில் தங்கியிருப்பது குறித்து கேள்வி ஒன்றுக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி பதில் அளித்துள்ளார். அவர் கூறிய பதில் அவதூறானது, உள்நோக்கம் கொண்டது, உண்மைக்குப் புறம்பானது.
மேலும் இந்த செய்தியை முரசொலி பத்திரிகை எந்தவித விசாரணையும் செய்யாமல் உள்நோக்கத்துடன் வெளியிட்டுள்ளது. இந்த செய்தி நல்ல எண்ணம், நல்ல நோக்கத்துடன் வெளியிடப்படவில்லை. தமிழக அரசுக்கும், முதல்வரின் பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் நோக்கத்தில் இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
எனவே இந்த செய்தி வெளியிட்ட முரசொலி பத்திரிகை, அதன் ஆசிரியர் செல்வம், கேள்வி-பதில் பகுதிக்கு பதில் அளித்த தி.மு.க. தலைவர் கருணாநிதி ஆகிய இருவரையும் அவதூறு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.


















