
மெல்போர்ன்: இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு அகதிகளாக ஒரே படகில் சென்ற 211 ஈழத் தமிழர்களை ஆஸ்திரேலிய கடற்படை மீட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவுக்கு வடக்கே இந்தோனேசிய கடற்பரப்பில் ஈழத் தமிழர்களின் படகு தத்தளித்துக் கொண்டிருந்தது. அப்போது சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆஸ்திரேலியாவின் ரோந்து படகுகள், ஈழத் தமிழர் படகை அடையாளம் கண்டது. இதையடுத்து படகில் தத்தளித்துக் கொண்டிருந்த 211 ஈழத் தமிழர்களை பாதுகாப்பாக மீட்ட ஆஸ்திரேலிய கடற்படையினர் அவர்களை மாற்று படகுகள் மூலம் மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர்.
ஆஸ்திரேலியாவில் 2007-ம் ஆண்டு தொழிற்கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு ஒரே படகில் இருநூற்றுக்கும் அதிகமானோர் அகதிகளாக பயணித்து வந்திருப்பது தற்போதுதான் என்று கூறப்படுகிறது.
நடப்பு ஆண்டில் மட்டும் மொத்தம் 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் புகலிடம் கோரி படகு மூலம் ஆஸ்திரேலியாவை சென்றடைந்துள்ளனர். இவர்களில் ஈழத் தமிழர்களே அதிகம். ஈழத் தமிழர்களைப் போல் ஈரானியர்கள், ஆப்கானிஸ்தானியர்கள் மற்றும் பாகிஸ்தானியர்களும் புகலிடம் கோரி ஆஸ்திரேலியாவுக்கு சென்றிருக்கின்றனர்.
கடந்த ஆண்டு 4,565 பேரும் 2010 ஆம் ஆண்டில் 6,555 பேரும் புகலிடம் கோரி படகு மூலம் ஆஸ்திரேலியாவுக்கு சென்றிருந்தனர்.


















