சென்னையில் அவசரமாக தரையிறங்கிய சிங்கப்பூர் விமானம்.. மீண்டும் இயக்க மறுத்த பைலட்!
சென்னை: சென்னையிலிருந்து இன்று அதிகாலையில் சிங்கப்பூர் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணித்த பயணிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து அந்த விமானம் மீண்டும் சென்னையில் தரையிறக்கப்பட்டது. ஆனால், ரூல்சை சுட்டிக் காட்டி அந்த விமானத்தை விமானி மீண்டும் இயக்க மறுத்துவிட்டதால் பயணிகள் பல மணி நேரம் தவியாய் தவித்தனர்.
IX682 என்ற அந்த விமானம் இன்று அதிகாலை 2.30 மணிக்கு சிங்கப்பூருக்குப் புறப்பட்டது. இதில் 182 பயணிகள், 8 ஊழியர்கள் பயணம் செய்தனர். திருச்சி வழியாக செல்ல இருந்தது அந்த விமானம்.
ஆனால், புறப்பட்ட சில நிமிடங்களில் ஒரு பயணிக்கு நெஞ்சு வலி ஏற்படவே உடனே அந்த விமானத்தை சென்னைக்கே திருப்பினர் விமானிகள். இதையடுத்து 2.40 மணிக்கு அந்த விமானம் மீண்டும் சென்னையில் தரையிறங்கியது.
உடனடியாக விமான நிலைய மருத்துவர்கள் வந்து அந்தப் பயணிக்கு முதலுதவி சிகிச்சை அளித்துவிட்டு, அவரை அப்பல்லோ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுவரை எல்லாமே சரியாகவே நடந்தது... இதன் பின்னர் தான் பிரச்சனை ஆரம்பித்தது.
பயணியை அப்பல்லோவுக்கு அனுப்பிய பின் விமானம் கிளம்பும் என நினைத்துக் கொண்டு காத்திருந்த பயணிகளுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. கிட்டத்தட்ட 3 மணி நேரம் ஆகியும் விமானம் கிளம்பவில்லை.
அதுமட்டுமல்ல, இந்த விமானம் எப்போது புறப்படும் என்ற விவரத்தையும் ஏர் இந்தியா நிர்வாகம் தெரிவிக்கவில்லை.
இதையடுத்து பயணிகளுக்கும் விமான சிப்பந்திகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
விமானத்தை இயக்குமாறு பைலட்களிடம் பயணிகள் கோரினர். ஆனால், ரூல்ஸ்படி நாங்கள் ஒரு நாளைக்கு ஒரு முறை தான் விமானத்தை இயக்க முடியும். மீண்டும் கிளம்பினால் அது 2வது முறை விமானத்தை இயக்கிதாகிவிடும். இதனால் எங்கள் மீது துறைரீதியில் நடவடிக்கை பாயும் என்று கூறிவிட்டனர்.
இதையடுத்து வேறு இரு விமானிகளை ஏர் இந்தியா அதிகாரிகள் தயார் செய்து அழைத்து வந்தனர்.
இந்த விமானம் மதியம் புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் இந்த விமானத்தில் சிங்கப்பூர் செல்ல திருச்சி விமான நிலையத்திலும் ஏராளமான பயணிகள் காத்திருந்தனர். திருச்சி விமான நிலையத்தில் விடிய, விடிய காத்திருந்ததால் பயணிகளும் அவர்களை வழியனுப்ப வந்திருந்த உறவினர்களும் அதிருப்தி அடைந்தனர்.
அவர்கள் விமான நிலைய அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.