அச்சமின்றி வாழ்வது தான் உண்மையான சுதந்திரம்-தமிழக முதல்வரின் சுதந்திர தின வாழ்த்து
சென்னை: ஜாதி, மத, இன வேறுபாடுகளை கலைந்து, மக்கள் அச்சமின்றி வாழ்வது தான் உண்மையான சுதந்திரம் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா தனது சுதந்திர தின வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.
நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் அவர் கூறியிருப்பதாவது:
இந்தியத் திருநாட்டின் சுதந்திரத்திற்காக தங்கள் இன்னுயிரை துச்சமென மதித்து, உயிர் தியாகம் செய்து, உலக நாடுகள் அனைத்தும் வியக்கத்தக்க வகையில் வேற்றுமையில் ஒற்றுமையைக் கண்டு, அடிமை விலங்கை தகர்ந்தெறிந்த இந்த இனிய நாளில், அனைவருக்கும் எனது சுதந்திர தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்து கொள்கிறேன்.
ஆங்கிலேயர் ஆதிக்கத்தில் நம் தாய் திருநாடு அடிமைப்பட்டு, சொல்லொணா துன்பத்திற்கு ஆளானதை நாம் ஒவ்வொருவரும் நன்கு அறிவோம். எனவே சுதந்திரப் போராட்ட வீரர்கள் சுதந்திர வேள்வித் தீயில் சொரிந்த செந்நீராலும், கண்ணீராலும் பெற்ற சுதந்திரத்தை பேணிக் காப்பது நம் அனைவரின் கடமையாகும்.
உங்கள் அன்பு சகோதரியின் தலைமையிலான அரசு, இந்திய திருநாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய தியாகிகளையும், சமுதாய மேம்பாட்டிற்காக பாடுபட்ட தலைவர்களையும் போற்றி பெருமைப்படுத்தி வருகிறது. அவர்களின் தியாகங்களை எதிர்கால தலைமுறையினர் அறிந்து பின்பற்றும் வகையில் நினைவுச் சின்னங்களை எழுப்பி, மரியாதை செய்து வருகிறது.
அனைத்து மக்களும் சாதி, மத, இன வேறுபாடுகளைக் களைந்து, அனைவரும் எல்லா வளமும் பெற்று, அச்சமின்றி வாழ்வது தான் உண்மையான சுதந்திரம் ஆகும். தமிழக மக்களின் வாழ்வு வளம் பெறுவதை குறிக்கோளாக கொண்டு செயலாற்றிடும் இவ்வரசுக்கு தமிழக மக்கள் அனைவரும் நல் ஆதரவு வழங்க வேண்டும் என்பதை தெரிவித்து, அனைவருக்கும் சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி கொள்கிறேன் என்று அந்த வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.