
நெல்லை: ஓணம் பண்டிகையை முன்னிட்டு புளியங்குடி மார்க்கெட்டில் எலுமிச்சம்பழங்கள் விலை உயர்ந்துள்ளது. ரூ.2,000க்கு விற்கப்பட்ட 1000 பழங்கள் தற்போது ரூ.4,000க்கு விற்கப்படுகிறது.
தமிழகத்தில் எலுமிச்சை உற்பத்தி மற்றும் விற்பனையில் நெல்லை மாவட்டம் புளியங்குடி முதல் இடம் வகிக்கிறது. இங்குள்ள எலுமி்ச்சை மார்க்கெட்டில் உள்ள 27 கடைகளில் எலுமி்ச்சம்பழங்கள் ஏலம் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு கேரளா, கர்நாடகா, மும்பை உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பப்படுகிறது. இது தவிர வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இங்கு சாதாரண நாட்களில் முதல் நிலை கொண்ட ஆயிரம் பழங்கள் ரூ.500 முதல் ரூ.1000 வரை விற்பனையாகும். கோடை காலங்களில் ஆயிரம் பழங்கள் ரூ.5,000 முதல் ரூ.5,500 வரை விற்பனையாகும். இந்த விலை ஏற்றம், இறக்கத்தால் விவசாயிகள் பாதிக்கப்படுவது தொடர்கதையாக உள்ளது. இந்நிலையில் கடந்த ஆடி மாதம் வரை 1,000 எண்ணிக்கை கொண்ட முதல் ரக எலுமிச்சம்பழங்கள் அதிகபட்சமாக ரூ.2,000 வரை ஏலம் போனது. தற்போது ஆவணி மாதம் பிறந்துள்ள நிலையில் கடந்த சில நாட்களாக எலுமிச்சம்பழம் விலை உயர்ந்துள்ளது. குறிப்பாக ஓணம் பண்டிகையையொட்டி இங்கிருந்து அதிக அளவு எலுமி்ச்சம்பழங்கள் கேரளாவுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.
இதன் காரணமாக தற்போது முதல் ரகம் கொண்ட ஆயிரம் எலுமிச்சம்பழங்கள் ரூ.3,500 முதல் ரூ.4,000 வரை ஏலம் போகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இருந்த போதிலும் கடும் வறட்சி நிலவுவதால் எலுமிச்சை வரத்து குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.










